திருப்பூர்: தாலுக்கா அலுவலகத்தில் ஊழியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்து போராட்டம்
திருப்பூரில் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் இல்லாமல் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
HIGHLIGHTS
வருவாய்த்துறையில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பதவி இறக்கம் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர்களின் பதவி உயர்வு ஆணைகளை விரைந்து வழங்கிட வேண்டும். வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வருவாய் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய் துறை ஊழியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூரிலும் வருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக திருப்பூரில் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் இல்லாமல் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் தாலுக்கா அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள், அதிகாரிகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.