திருப்பூர்; பஸ் ஸ்டாண்டுகளில் ‘அலங்கோலமாக’ படுத்து தூங்கும் ‘குடி’ மகன்களால், மக்கள் அதிருப்தி
Tirupur News,Tirupur News Today- திருப்பூர், பல்லடம் பஸ் ஸ்டாண்டுகளில், பகல் வேளைகளில், உடலில் ஆடை விலகிய நிலையில், படுத்து தூங்கும் போதை நபர்களால், மக்கள் அதிருப்தியும், அருவறுப்பும் அடைகின்றனர்.
HIGHLIGHTS

Tirupur News,Tirupur News Today- பல்லடம் பஸ் ஸ்டாண்டில் ‘ஹாயாக’ தூங்கும் ‘குடி’மகன்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர், பல்லடம் பஸ் ஸ்டாண்டுகளில், ‘குடி’மகன்கள் தொல்லையால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருப்பூர் மாநகர மத்தியில், பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. தற்போது, பல கோடி ரூபாய் செலவில் இந்த பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு, கலைஞர் கருணாநிதி பஸ் ஸ்டாண்ட் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுப்பொலிவுடன், சில மாதங்களுக்கு முன்புதான், இந்த பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள், கழிப்பிட பகுதிகளில் உள்ள முன்பகுதிகளில் ‘குடி‘மகன்கள் பகல் வேளைகளில், போதையில் படுத்து தூங்குகின்றனர். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் விலகிய நிலையில், அலங்கோலமாக படுத்து தூங்குகின்றனர். தவிர சிகரட், பீடிகளை புகைத்து தள்ளுவதால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில், பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் அருவறுப்படைகின்றனர். மேலும், சத்தமாக பாட்டு பாடுவது, ஆபாச வார்த்தைகள் பேசுவது போன்ற அருவறுக்கத்தக்க செயல்களிலும் ‘குடி’மகன்கள் ஈடுபடுகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை நபர்களின் தொல்லைக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்த வேண்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குள் போலீசார் இருந்தும், ‘குடி’மகன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், மக்களின் புகாராக உள்ளது.
பல்லடம்
பல்லடம் பஸ் ஸ்டாண்டில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சமீபகாலமாக பஸ் ஸ்டாண்டில் போதை நபர்கள் தொல்லை நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில்,கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே, போலீசார் பஸ் ஸ்டாண்டில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை நபர்களை அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.