/* */

பூட்டிய அறைக்குள் டாக்டரின் சடலம்; திருப்பூரில் பரபரப்பு

tirupur News, tirupur News today- திருப்பூரில் பூட்டிய அறையில் டாக்டர் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பூட்டிய அறைக்குள் டாக்டரின் சடலம்; திருப்பூரில் பரபரப்பு
X

tirupur News, tirupur News today- பூட்டிய அறைக்குள் சடலமாக கிடந்த டாக்டர்- திருப்பூரில் பரபரப்பு.

tirupur News, tirupur News today- தேனி மாவட்டம் கே.பி.ஆர்.நகரை சேர்ந்தவர் மாடசாமி குணசேகரனின் மகன் ராஜேஷ்கண்ணா (வயது 29). மருத்துவப்படிப்பு படித்துள்ளார். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன், திருப்பூர் வந்து தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணி செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின், திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து, கடந்த 10 நாட்களாக தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை, அவர் தங்கியிருந்த அறைக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனடியாக விடுதியின் உரிமையாளர் திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனடியாக வந்து கதவை உடைத்து, உள்ளே சென்றனர்.

அப்போது அங்கு படுக்கையில், ராஜேஷ் கண்ணா உடல் அழுகி, ஆடை கலைந்த நிலையில் சடலமாக கிடந்தார். அங்கு காலி மதுபாட்டில்கள் அதிகமாக இருந்தது. இதையடுத்து அவருடைய சடலத்தை கைப்பற்றிய போலீசார், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கடந்த 21-ம் தேதி இரவு தான் தங்கியிருந்த அறைக்குள் சென்ற ராஜேஷ் கண்ணா அதன்பிறகு வெளியே வரவில்லை என்பது, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து ராஜேஸ் கண்ணாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தேனியில் இருந்து விரைந்து வந்தனர். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், ராஜேஷ் கண்ணா ரஷ்யாவில் டாக்டருக்கு படித்துள்ளார். சொந்த ஊர் திரும்பிய பின், இந்தியாவில் மருத்துவம் பார்ப்பதற்கான இந்திய மருத்துவ கழகத்தின் தேர்வை எழுதியபோது, குறைந்த மதிப்பெண்களில் தொடர்ந்து தேர்ச்சியடையாமல் இருந்துள்ளார். இதில் மனமுடைந்த அவர் மதுப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருப்பூர் வந்த ராஜேஷ் கண்ணா, திருப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். அதில் கிடைத்த சம்பளத்தை வைத்து, அறையில் மது அருந்தியதாக தெரிகிறது. அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்தாரா? வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணைக்கு பின் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பூட்டிய அறையில் டாக்டர் இறந்து கிடந்த சம்பவம், திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது மருத்துவ சேவையால், பல உயிர்களை காக்கக் கூடிய உன்னத பணியை மேற்கொண்டுவந்த இளம் டாக்டர், குடிபோதையால் தன் வாழ்வை அழித்துக்கொண்டார் என்பதுதான், இதில் குறிப்பிடத்தக்கது. மதுப்பழக்கம்தான், டாக்டரின் இறப்புக்கு காரணமா என்பது குறித்த கோணத்தில், திருப்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காதல் தோல்வி காரணமாக, டாக்டர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமோ என்ற கோணத்திலும், டாக்டரது நண்பர்கள், உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Updated On: 24 March 2023 7:11 AM GMT

Related News