சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் 'போக்சோ'வில் கைது
திருப்பூரில் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வடமாநில தொழிலாளியை 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
ஒடிசா மாநிலம் சம்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவம் பட்நாயக் (வயது 24). இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில், டெய்லராக வேலை செய்துள்ளார். இடுவம்பாளையம் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று வந்தபோது, அப்பகுதியில் 10ம் வகுப்பு படித்த சிறுமியிடம், அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, மூன்று மாதத்துக்கு முன், ஒடிசா மாநிலத்துக்கு அழைத்து சென்று விட்டார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திருப்பூர் மத்திய போலீசாரிடம் புகார் அளித்தனர். ஒடிசா சென்ற போலீசார், இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, அனுப்பினர். இன்ஸ்பெக்டர் சிவசங்கரி விசாரணை நடத்தி, சிறுமியை ஏமாற்றிய சிவம் பட்நாயக் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.