திருமூர்த்தி அணை நீர்மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
Tirupur News- திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், விரைவில் பாசன தண்ணீர் திறக்கப்படும் என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் உள்ளனர்.
HIGHLIGHTS
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் நீர் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இவற்றிற்கு 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
காண்டூர் கால்வாயில் நடந்துவந்த புனரமைப்புபணி நிறைவடைந்ததை அடுத்து பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 72 கோடி மதிப்பில் காண்டூர் கால்வாயில் ஏற்பட்ட பழுதுகள் சமீபத்தில் நீக்கப்பட்டதோடு நீர்க்கசிவுகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு பக்கவாட்டு சுவர்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பரம்பிக்குளம் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் உடைப்பு, நீர் கசிவு இன்றி திருமூர்த்தி அணையை வந்து அடைந்தது .
இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று நீர்மட்டம் 36. 74 அடியாக இருந்தது. அணைக்கு 821 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 23 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் 4 மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்று தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை விரைந்து செல்வது குறித்தும் தண்ணீர் திருட்டை தடுப்பது குறித்தும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அணையில் இருந்து, நாளை மறுதினம் (15-ம் தேதி) பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படலாம் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.