பெற்ற தாயை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன் கைது
உடுமலை அருகே சொத்துக்காக, பெற்ற தாயை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
உடுமலையை அடுத்த சின்ன பாப்பனுாத்தை சேர்ந்தவர் சபாபதி (வயது 65). இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களது மகன் சதீஷ்குமார் (வயது 35), டிரைவர். சதீஷ்குமாருக்கு மனைவி, மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது தந்தைக்கு சொந்தமான சொத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
கடந்த 12-ம் தேதி காலை 11 மணியளவில், சொத்து விவகாரம் குறித்து தாயார் பூங்கொடியுடன் சதீஷ்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில்,. ஆத்திரமடைந்த சதீஷ்குமார் பூங்கொடியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்து மயக்கமான அவரை, சதீஷ்குமார் தூக்கிச்சென்று தோட்டத்திற்கு அருகே உள்ள பி.ஏ.பி. பிரதான கால்வாயில் போட்டு விட்டு தலைமறைவாவார். தற்போது கால்வாயில் 2-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பூங்கொடி, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் தனது மனைவியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த சபாபதி தளி போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் அமராவதி அருகே உள்ள சாயப்பட்டறை பகுதியில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை, போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தனது தாயாரை அடித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பூங்கொடியின் உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
போலீசாரின் அலட்சியம்
இதுகுறித்து, பூங்கொடியின் கணவர் சபாபதி கூறுகையில், சதீஸ்குமார் கடந்த 10 மாதங்களாகவே எனது சொத்தை அவர் பெயருக்கு எழுதி வைக்குமாறு எங்களை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். அவருடைய தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் நான் தோட்டத்தை விட்டுவிட்டு, வெளியில் கூலி வேலைக்கு சென்று விட்டேன். அப்போது எனது மனைவியையும் உடன் வருமாறு அழைத்தேன். ஆனால் அவர் என்னுடன் வர மறுத்துவிட்டு தோட்டத்து சாலையிலேயே இருந்து விட்டார். எனது மகனின் அராஜக செயல் குறித்து போலீஸ் ஸ்டேஷனில் பலமுறை புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதை சாதகமாகக் கொண்ட அவர், கடந்த செப்டம்பர் 6-ம் தேதி எனது மனைவியின் கையை அரிவாளால் வெட்டிவிட்டார். உள்நோயாளியாக இருந்த என் மனைவியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், பெயரளவுக்கு வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நான் வேலை செய்து கொண்டிருந்த இடத்துக்கு வந்து, கடந்த 2-ம் தேதி எனது காரை எனது மகன் எடுத்துச் சென்றார். இதுகுறித்து உடுமலை போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 12-ந் தேதி என்னுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த எனது மனைவியை எனது மகன் தாக்கினார். அப்போது, 'அய்யோ என்னை அடிக்காதே' என்று எனது மனைவியின் அலறல் சத்தத்துடன் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. பத்துமாதம் சுமந்து பெற்று வளர்த்த தாயை ஈவு இரக்கம் இல்லாமல் சொத்துக்காக எனது மகன் கொலை செய்து விட்டான். நான் அளித்த புகார்கள் அடிப்படையில் போலீசார் தக்க தருணத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் எனது மனைவி இன்று உயிருடன் இருந்திருப்பார், என்றார்
சொத்துக்காக பெற்ற தாயை, மகன் அடித்து கொலை செய்தது, உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.