/* */

பனியன் உற்பத்திக்கு தொழில் பூங்காக்கள்; சலுகைகளை அறிவித்த மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில், ஆயத்த ஆடை உற்பத்தி தொழில் பூங்காக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. பனியன் உற்பத்திக்கான பல சலுகைகளை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

பனியன் உற்பத்திக்கு தொழில் பூங்காக்கள்; சலுகைகளை அறிவித்த மத்திய பிரதேசம்
X

பனியன் உற்பத்தியை அதிகரிக்க, தொழில் பூங்காக்களை உருவாக்க மத்திய பிரதேச மாநில அரசு ஆர்வம் ( கோப்பு படம்)

விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறது. ஒவ்வொரு நாடும் ஜவுளித்தொழில்கள் மூலம் வேலை வாய்ப்பையும், பொருளாதார நிலையையும் உயர்த்திக்கொள்கின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஜவுளித்தொழில் பின்தங்கியுள்ளது. அங்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பிரபலமான தொழில் நகரங்களின் மீது பார்வை திரும்பியுள்ளது. பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தின் முக்கிய நகராக உள்ள திருப்பூரை வெளிமாநிலங்கள் பார்க்கின்றன. அதற்காகவே பின்னலாடை தொழில்துறையினர் தங்கள் மாநிலத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுக்கின்றனர்.

மத்தியபிரதேச மாநில அரசு பல்வேறு சலுகை அறிவிப்புகளுடன் திட்டங்களை செயல்படுத்தி ஆயத்த ஆடை உற்பத்தி தொழில் பூங்காக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், அரசு இயங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் நல்லுறவு காரணமாக தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய தொழில்கள் உருவாக்கவும் விரிவான திட்டமிடலுடன் செயல்பட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக அம்மாநில வெளியுறவுத்துறை கூடுதல் செயலர் மணீஷ்காந்த் தலைமையிலான குழுவினர் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து தொழில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

மத்திய பிரதேச அரசு, அதிரடி சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி தொழிலாளருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனத்துக்கு ஒவ்வொரு தொழிலாளருக்கும் தலா, 5,000 ரூபாய் வீதம், 5ஆண்டுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் தொழில் துவங்கும் நோக்கில், எந்திரங்கள் வாங்கினால் முதலீட்டு மானியமாக 40 சதவீதம் வரை வழங்கப்பட உள்ளது. மீதியுள்ள முதலீட்டு கடனுக்கு 5 சதவீத வட்டி சலுகையும் அறிவித்துள்ளது. தொழிற்சாலை இயக்கத்துக்கு தேவையான மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும். மின்கட்டணத்தில், யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கட்டண சலுகை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. அதிரடி அறிவிப்புகளை தொடர்ந்து அம்மாநில அரசு பிரதிநிதிகள் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தொழில் முதலீட்டை ஈர்த்து வருகின்றனர்.

அந்தவகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், பல்வேறு மாநிலங்களிலும் தொழில் துவங்க வருமாறு மத்திய பிரதேச அரசு பிரதிநிதிகள் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களிலும், பின்னலாடை தொழிலை துவங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய பிரதேச அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி தொழில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளது. மாநிலத்தில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு நலன் கருதி அழைப்பு விடுத்துள்ளனர். திருப்பூரை சேர்ந்த சில நிறுவனங்கள், அங்கு முதலீடு செய்ய தயாராக உள்ளன, என்றார்.

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடியாக ஏற்றுமதி வா்த்தகம் அதிகரிக்கும் என்று 'பியோ' தலைவா் சக்திவேல் கூறியுள்ளாா்.

இது குறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவா் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உதவிய தொழில் துறை அமைச்சா் பியூஸ் கோயலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவில் இது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. ஏற்கனவே துபாய் நாட்டுடன் வா்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக இருநாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி வா்த்தகம் மேம்படும். தற்போதைய நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 98.3 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி இல்லாமல் வா்த்தகம் மேற்கொள்ள முடியும். அடுத்து வரும் 5 ஆண்டுகளில் 100 சதவீதம் வரியில்லா வா்த்தகம் அமையும். ஆயத்த ஆடை, ஜவுளி, தோல், காலணிகள், இயந்திரங்கள், எலெக்ட்ரிக்கல் பொருள்கள், மருந்து வகை பொருள்களை இறக்குமதி செய்ய வசதியாக அமையும். நிலக்கரி, காப்பா், நிக்கல், அலுமினியம், மாங்கனீஸ், கம்பளி உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி அதிகரிக்கும். 18 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை பயிலும் இந்திய மாணவா்கள் ஒரு லட்சம் பேருக்கு விசா எளிதில் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டின் ஏற்றுமதி வா்த்தகம் 2025ம் ஆண்டில் 15 பில்லியன் டாலராக உயரும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல இருநாட்டு பொருளாதார வா்த்தகம் 50 பில்லியன் டாலராக உயரும்.

இவ்வாறு சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

Updated On: 24 Nov 2022 4:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?