வாஸ்து சரியில்லையாம்: ஹைட்ராலிக் மூலம் வீட்ட நகத்துறாங்க
உள்நாட்டு தொழில்நுட்பமான ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் வீட்டை நகர்த்தும் பணி திருப்பூரில் நடைபெற்று வருகிறது
HIGHLIGHTS
வீட்டை இடிக்காமல் வீட்டை நகர்த்தும் உள்நாட்டு தொழில்நுட்பமான ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் இரண்டு பெட்ரூம் உள்ள வீடு 25 அடி தூரம் நகர்த்தப்பட்டது. இச்சம்பவம் முதன்முதலாக திருப்பூரில் நடந்துள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் 1,200 சதுர அடி பரப்பளவுள்ள இரண்டு படுக்கை அறை வசதி கொண்ட கான்கிரீட் வீடு உள்ளது. அந்த வீட்டில் வாஸ்து சரியில்லை என கூறப்பட்டதால், வீட்டை இடிக்காமல் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நகர்த்தும் பணி தொடங்கியுள்ளது. ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் ஸ்க்ரூ ஜாக்கி மூலமாக மெல்ல மெல்ல கட்டிடத்தை நகர்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து நவீன தொழில்நுட்பத்தை கையாளும் திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் கூறும்போது, 180 ஜாக்கிகள் மூலமாக 3 அடி உயரத்துக்கு கட்டிடம் உயர்த்தப்பட்டது. பின்னர் 60 ரோலர்கள் உதவியோடு கட்டிடம் நகர்த்தப்பட்டது. ஒரு நாளுக்கு 8 அடி தூரம் என 3 நாட்களில் 24 அடி தூரம் நகர்த்தப்படும். இதுவரை 8 அடி தூரம் நகர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மொத்தம் ரூ.5 லட்சம் வரை செலவாகும். கட்டிடத்துக்கு எந்தவித சேதரமும் ஏற்படாது. இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக 5 மாடி உயர கட்டிடம் வரை நகர்த்தவும், உயர்த்தவும் முடியும் என்றார்.
இந்த ஹைட்ராலிக் ஷிப்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய வீடு, பெரிய வீடு, கோயில்கள், 5 மாடி கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என எதுவாக இருந்தாலும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நகர்த்தவும் உயர்த்தவும் முடியும் என்றும் புதிதாக ஒரு கட்டடத்தை கட்டுவதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் இதுபோன்ற தொழில்நுட்பத்தின் மூலம் வீட்டை உயர்த்துவதற்கும் நகர்த்துவதற்கும் ஆகும் செலவு மிகக் குறைவு என்றும் வல்லுநர்கள் கூறுகின்றர்