ஆற்றில் மூழ்கியவர், மூன்று நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு
தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கிய வாலிபரின் சடலம், மூன்று நாட்களுக்கு பின், மீட்கப்பட்டது.
HIGHLIGHTS
திருப்பூர் மூலனூரை சேர்ந்த சக்திவேல் மகன்கள் தினேஷ்குமார் (வயது 24), கவின்குமார் (22). இவர்களது நண்பர் அமீர் (24). மூன்று பேரும், மூன்று தினங்களுக்கு முன், தாராபுரம் அமராவதி ஆற்றில் நகராட்சி நீரேற்று நிலையம் அருகில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் ஆழமான பகுதியில் குளித்த போது, தினேஷ்குமார் நீரில் மூழ்கினார். இதுகுறித்து கவின்குமார், அமீர் இருவரும், தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில், வீரர்கள் அமராவதி ஆற்றில் இறங்கி தினேஷ்குமாரை தேடினர். இரண்டு நாட்களாக தேடியும், தினேஷ்குமார் கிடைக்காததால் தேடும் முயற்சியை தீயணைப்புத் துறையினர் கைவிட்டனர்.
இந்நிலையில் நேற்று, அமராவதி பழைய பாலத்தின் வழியாக ஒருவரின் சடலம் மிதந்து செல்வதாக மூலனூரை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு தகவல் கிடைத்தது. சிலர், ஆற்றில் இறங்கி தில்லாபுரி அம்மன் கோவில் பகுதியில் பாறை இடுக்கில் சிக்கியிருந்த தினேஷ்குமார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.