வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு
திருப்பூர் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஒரு ஆண்டாக எந்தவிதமான வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு இதுவரை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இனி மாதந்தோறும், அவர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மற்றவர்களுக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, மாற்றுத்திறனாளிக்கு மாத உதவித்தொகையாக ரூ.600-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், மாற்றுத்திறனாளிக்கு ரூ.600-ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750-ம், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000-ம் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு சார்பில், இதுபோல் படித்து வேலைவாய்ப்பு இல்லாத, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகள் என உதவித்தொகை வழங்க, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. எந்தவிதமான வேலை வாய்ப்பும், வருமானமும் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், இந்த திட்டத்தின் கீழ், உதவித்தொகை பெறும் வகையில், விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொலைதூரக்கல்வி கற்பவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பிப்பவர்கள் முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல்வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை 5 ஆண்டு தொடர்ந்து புதுப்பிப்பவர்கள், மாற்றுத்திறனாளி என்றால் பதிவு செய்து ஓராண்டு முடித்தவர்கள் www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் 2022-23-ம் ஆண்டுக்கான சுயஉறுதி மொழி ஆவணத்தை வருகிற டிசம்பர் மாதம் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
கோர்ட் அறிவுறுத்தல்:
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் எந்தவிதமான சிரமும் இல்லாமல் அரசின் மாதாந்திர உதவித்தொகை திட்ட பலன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கடந்த செப். 20ம் தேதி வெளியிட்ட உத்தரவில் தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியது.
சென்னை ஐ கோர்ட்டில், 'நேத்ரோதயா' என்ற அமைப்பு கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழகத்தில் உள்ள பிறவகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படுத்தி வருகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தை சமூக நலத்துறை செயல்படுத்துகிறது. இதனால், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு மாற்ற வேண்டும். பிறவகை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதைப் போன்றே, பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும்" என்று கோரியிருந்தது.
அப்போது அரசுத் தரப்பில், "தமிழக அரசு சார்பில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவிகளை பட்டியலிடப்பட்டது. மேலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, பொது வேலை வாய்ப்பில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகைகள், மத்திய அரசு திட்டம் மூலம் வழங்கப்படுவதால் சமூக நலத்துறை மூலம் இத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை பெற மாவட்டம் தோறும் வருவாய் கோட்டாட்சியர்களை அதிகாரிகளாக நியமித்து, அவர்களின் தனிப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்படும்" என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள் அமர்வு, அரசின் உத்தரவாதத்தின் அடிப்படையில் பார்வை மாற்றுத்திறனாளிகள், எந்தவித சிரமும் இன்றி உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என, உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.