22 பவுன் நகை, ரூ. 5.80 லட்சம் திருட்டு; அக்கா - தம்பி கைது
உடுமலை அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்து, 22 பவுன் நகை, ரூ.5.80 லட்சம் திருடிய வழக்கில் அக்கா-தம்பி கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த ஆண்டியக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 60) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் செந்தில்குமார் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். செந்தில்குமாரின் மனைவி மற்றும் மகனுடன் பழனியம்மாள் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பேரனுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவனை அழைத்துக்கொண்டு மருமகள், வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, பழனியம்மாள் வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள இளைய மகன் விஜயகுமார் வீட்டில் சென்று இரவில் தூங்கியுள்ளார். காலையில் வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. சிமெண்ட் தகடு பொருத்தப்பட்ட மேற்கூரை உடைக்கப்பட்டு உள்ளே உள்ள பொருட்கள் கலைந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பழனியம்மாள் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 22 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து குமரலிங்கம் போலீஸ் ஸ்டேஷனில் பழனியம்மாள் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் செந்தில்குமார் பழைய வீட்டுக்கு அருகில், புதிய வீடு கட்டும் பணிகள் மேற்கொண்டுள்ளனர். அந்த பணியின் போது பொக்லைன் உதவியாளராக வேலை பார்த்த கல்லாபுரம், புரட்சித்தாய்புரத்தைச் சேர்ந்த முருகன் மகன் விஷ்ணு (19) இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
அவரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தியதில், வீட்டின் மேற்கூரையை உடைத்து, பீரோவுக்குள் இருந்த 22 பவுன் நகைகள் மற்றும் ரூ. 5.80 லட்சம் ரூபாய் பணத்தை திருடியதை விஷ்ணு ஒத்துக்கொண்டார். மேலும் திருடிய நகைகளை பூளவாடி புதுநகரில் வசித்து வரும் அவருடைய அக்கா தங்கமாரி (30) என்பவர் உதவியுடன் அடகு வைத்து, பணத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், இருவரும் திட்டமிட்டு புதைத்து வைத்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், பீதியடைந்த அவர்கள், வீட்டில் பணத்தை வைக்காமல், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், புதைத்து வைத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. போலீசாரிடம் பிடிபடாத பட்சத்தில், இன்னும் சில மாதங்கள் கழிந்த பின்னர், புதைத்து வைத்த பணத்தை எடுத்து, செலவழிக்கவும் இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து போலீசார், விஷ்ணு மற்றும் அவருடைய அக்கா தங்கமாரி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை போலீசார் கைப்பற்றினர்.நகை, பணம் திருடிய வழக்கில் அக்கா, தம்பி கைது செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.