அரசு பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
திருப்பூரில் அரசு பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் உயிரிழந்தார். மகள் கண் எதிரே தாய் சாவு பரிதாபம்.
HIGHLIGHTS
திருப்பூரை அடுத்த கோவில்வழியைச் சேர்ந்தவர் மாஜித், இவரது மனைவி சுருதி(25), இந்த தம்பதிக்கு ஆதிரா என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது. மாஜித் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சுருதி தனது இரு சக்கர வாகனத்தில் தாய் சந்திரிகா(45), மகள் ஆதிராவுடன் திருப்பூர் வந்துள்ளார். இதன் பிறகு மூவரும் இருசக்கர வாகனத்தில் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் திருப்பூர் தெற்கு காவல்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவில்வழி நோக்கிச் சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சந்திரிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுருதி, ஆதிரா ஆகியோர் காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் மகள் கண் எதிரே தாய் உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.