பாலாற்றில் வெள்ளம்; ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு
வாணியம்பாடி பாலாற்று பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை உடனடியாக அகற்ற கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்திரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாலாற்றில் வெள்ளம் வந்து கொண்டுள்ளது.
இதனையடுத்து, ஆங்காங்கே ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று ஜப்ராபாத் தடுப்பணை பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக உதயேந்திரம் ஏரிக்குச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். அங்கு குவிந்துள்ள குப்பைகளை முறையாக அகற்றவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி உடனடியாக ஏரிக்குச் செல்லும் கால்வாய் பகுதி முழுமையாக சீரமைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மணவாளன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.