திரு இருதய ஆலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு பிரார்த்தனை
உடையார்பட்டி திருஇருதய ஆலயத்தில் பேராலய பங்குத்தந்தை மிக்கேல்ராசு புத்தாண்டு ஆசி வழங்கி திருப்பலி நிகழ்த்தினார்
HIGHLIGHTS
நெல்லையில் 2022 புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உடையார்பட்டி திரு இருதய ஆலயம், பாளையங்கோட்டை சவேரியார் பேராலயம், கத்தீட்ரல் பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நாடுமுழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 2022 புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்து கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நெல்லை உடையார் பட்டியில் உள்ள திரு இருதய ஆலயம், பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட பேராயர் அருட்திரு.அந்தோணி சாமி சவரிமுத்து கலந்து கொண்டு திருப்பலி நடத்தி நற்செய்தி மற்றும் புத்தாண்டு செய்திகளை வழங்கினார்.
அதேபோல் திரு இருதய ஆலயத்தில் திருஇருதய பேராலய பங்குத்தந்தை மிக்கேல் ராசு புத்தாண்டு நற்செய்திகளை வழங்கினார். இதுபோன்று கத்தீட்ரல் பேராலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
புத்தாண்டு பிறப்பையொட்டி தேவாலயங்கள் மற்றும் நெல்லை மாநகர வீதிகள் மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. வீதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகரம் முழுதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.