அவன் இவன் திரைப்பட வழக்கில் அம்பாசமுத்திரம் நீதிமன்றம் தீர்ப்பு: இயக்குநர் பாலா விடுதலை
போதிய ஆதாரம் இல்லததால் பாலாவை விடுவித்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் காரத்திகேயன் தீர்ப்பளித்தார்.
HIGHLIGHTS
2011இல் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடித்த அவன் இவன் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் சொரிமுத்தையனார் கோயில் ஆகியவற்றை இழிவுபடுத்தி காட்சிகள் வைக்கப்பட்டதாக சிங்கம்பட்டி ஜமீன்தார் உறவினர்கள் சார்பில் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், இயக்குநர் பாலா ஆகியோர் மீதுவழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கில் தயாரிப்பாளர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து கதைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி அதன் அடிப்படையில் விலக்கு பெற்றார். கடந்த ஜனவரி 25ஆம் தேதி வழக்கில் ஆஜரான நடிகர் ஆர்யா யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் நடிக்கவில்லை அப்படி புண்படுத்தியிருந்தால் ஜமீன்தார் குடும்பத்திடம் மன்னிப்பு கோருகிறேன் என்று கேட்டார், அதன் அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பாலா தரப்பு தொடர்ந்து வழக்கை நடத்தியது. செவ்வாய்க்கிழமை அன்று தீர்ப்பு என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் இயக்குனர் பாலா தரப்பு வழக்கறிஞர் மட்டும் ஆஜரானார், மீண்டும் புதன்கிழமை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் பாலா ஆஜர் ஆகவில்லை வழக்கின் தீர்ப்பு இன்று கூறப்படும் பாலா நீதிமன்றத்தில் காலை பத்து முப்பது மணிக்கு ஆஜர் ஆகவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனடிப்படையில் தீர்ப்பு நாளான இன்று பாலா தனது வழக்கறிஞருடன் ஆஜரானார். வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் பாலாவை விடுவித்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் காரத்திகேயன் தீர்ப்பளித்தார்.