"மூடைக்கு 2 கிலோ பிடித்தம், 50 ரூபாய் வசூல்" -விவசாயிகள் புகார்: சப் கலெக்டர் ஆய்வு
அயன் சிங்கம்பட்டி அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார்.
HIGHLIGHTS

மாதிரி படம்.
நெல்லை மாவட்டம், அயன் சிங்கம்பட்டி அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடப்பதாக சேரன்மகா தேவி சப்-கலெக்டருக்கு அலைபேசியில் புகார் தெரிவித்தனர்.
இதனால் நேற்று திடீரென நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஆய்வு செய்ய வந்தார் சப் கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, அப்போது பணியிலிருந்த எழுத்தர் சிவகுமாரிடம் விசாரணை நடத்தினார். பதிவேடுகளை ஆய்வு செய்தவர், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகளை பார்வை யிட்டார்.
அப்போது அங்கிருந்த விவசாயிகள், வேளாண் துறையில் பதிவு செய்து பெறப்பட்ட டோக்கன் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை. மூடைக்கு 40 கிலோவுக்கு பதில் 41 முதல் 42 கிலோ வரை நெல் பிடிக்கப்படுவதுடன், மூடைக்கு கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் எடை மிஷின் வைக்க வேண்டும். அல்லது இக்கிராமத்தில் கூடுதலாக ஒரு கொள்முதல் மையம் திறக்க வேண்டும். நெல் மூடைகள் மழையில் நனைவதால் கரையான் பிடித்துள்ளது,விவசாயிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பதால் நெல் கொள்முதல் மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று தெரிவித்தனர்.
விவசாயிகள் கூறியதைக் கேட்ட சப்-கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, கலெக்டரிடம் பேசி விரைவில் நல்ல முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். அம்பாசமுத்திரம் தாசில்தார் வெற்றிசெல்வி, வேளாண்மை உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.