திருச்சி அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சை :அமைச்சர் தகவல்
திருச்சி அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சை பிரிவு விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
HIGHLIGHTS
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் இன்று நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போபது அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக திருச்சி அரசு மருத்துவமனையில் ரேடியோதெரபி சிகிச்சை ஏற்படுத்தித்தர வேண்டுமென்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கோரிக்கை வைத்து உள்ளார்.
புற்றுநோய்க்கு ரேடியோதெரபி அளிப்பதற்கு தற்போது தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டியது உள்ளது. இது நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே திருச்சி அரசு மருத்துவமனையில் ரேடியோதெரபி துறை ஏற்படுத்தி தரவேண்டும் என்று அமைச்சர் நேரு கூறி இருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ரேடியேஷன் துறை ஏற்படுத்துவதற்காக ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார். அதற்கான மருத்துவ கருவி வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் 25 நாட்களில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ரேடியோதெரபி துறை ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.