திருச்சி மாநகராட்சி விரிவாக்கம்: அமைச்சர் நேரு அதிகாரிகளுடன் ஆலோசனை
திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் தொடர்பாக அமைச்சர் நேரு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
HIGHLIGHTS
65 வார்டுகளுடன் உள்ள திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட இருக்கிறது. இதற்காக திருச்சி அருகே உள்ள 20 ஊராட்சிகள் மற்றும் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட இருக்கிறது.
தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு ஊராட்சி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் அவர்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, முசிறி பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்கா தரணி,மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.