திருச்சியில் வருகிற 4ம் தேதி வருவாய் உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு
திருச்சியில் வருகிற 4ம் தேதி வருவாய் உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற இருப்பதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
திருச்சி மாவட்ட வருவாய் அலகில் கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு எதிர்வரும் 04.12.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டத்தில் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டத்தில் புத்தூர் பிஷப் ஹீபர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருவெறும்பூர் வட்டத்தில் குண்டூர் எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியிலும், ஸ்ரீரங்கம் வட்டத்தில் ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மணப்பாறை வட்டத்தில் உசிலம்பட்டி தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளியிலும், மருங்காபுரி வட்டத்தில் வளநாடு விடியல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், இலால்குடி வட்டத்தில் இலால்குடி நெஸ்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், முசிறி வட்டத்தில் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுரியிலும், துறையூர் வட்டத்தில் கண்ணனூர் இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இமயம் பொறியியல் கல்லூரி மற்றும் இமயம் கல்வியியல் கல்லூரியிலும் மற்றும் தொட்டியம் வட்டத்தில் தோளூர்பட்டி கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கொங்குநாடு பொறியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.
தேர்வுக்குரிய அனுமதிச் சீட்டினை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் வரப்பெறும் Linkன் மூலமும் மற்றும் விண்ணப்பதாரர்கள் இந்த link மூலமாகவும் ஹட்டப்ஸ்ூ://agaram.tn.gov.in/onlineforms/formpage_openid43-174 பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்தேர்வுக்கான அனுமதி முற்றிலும் தற்காலிகமானது. ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உள்ள உரிமைக் கோரல்களுடன் தொடர்புடைய பிற விவரங்கள் ஆகியவற்றின் முடிவுகளுக்கு உட்பட்டது. எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர் விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50 மணிக்குப் பின் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை தேர்வு அறைக்கு தவறாமல் கொண்டு வர வேண்டும். இந்த தேர்வுக்கு உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிச் சீட்டு மற்றும் கருப்பு பால் பாயிண்ட் பேனாவைத் தவிர வேறு எதையும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது. விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்கு கொண்டு வரக்கூடாது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.