வறுமையிலும் நேர்மை தவறாத பெண்ணிற்கு குவியுது பாராட்டுக்கள்
வறுமையிலும் நேர்மை தவறாத பெண்ணிற்கு குவியுது பாராட்டுக்கள்
HIGHLIGHTS
திருச்சி தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு டிபன் கடையில் வேலை செய்பவர் ராஜேஸ்வரி (வயது 50). இவருக்கு அந்த கடையில் ஒரு நாள் சம்பளமாக ரூ. 100 வழங்கப்படுகிறது. வறுமையில் வாடுவதால் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ராஜேஸ்வரி தினமும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அவர் கடைக்கு வேலைக்கு வந்த போது கடை அருகில் ஒரு காகிதப்பை கிடந்ததை கண்டு எடுத்தார். அந்தப் பையில் ஏராளமாக பணம் இருந்தது. அதை எடுத்த ராஜேஸ்வரி தனது கடை முதலாளியிடம் கொடுத்து கீழே கிடந்து எடுத்தேன். இதில் நிறைய பணம் இருப்பது போல் தெரிகிறது என்று கூறினார். எண்ணிப் பார்த்தபோது அதில் 2 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. உடனடியாக கடை உரிமையாளர் பிரபாகரனும் ராஜேஸ்வரியும் அந்த பணத்தை தில்லை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ராஜேஸ்வரி நினைத்திருந்தால் தனது வறுமையை போக்க இந்த பணம் தேவையானது தான் என நினைத்து கடை முதலாளியிடம் சொல்லாமல் தனது வீட்டிற்கு சென்று இருக்கலாம் .ஆனால் வறுமையில் வாடும் நிலையிலும் அவர் நேர்மையை கடைப்பிடிக்க தவறவில்லை .அவர் செய்த செயல் இன்று உலகம் முழுவதும் பாராட்டும் செயலாக புகழ்ந்து பேசப்படுகிறது.
இந்த பெண்ணின் நேர்மையை பாராட்டிய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் இன்று தனது அலுவலகத்திற்கு அந்த பெண்ணை வரவழைத்து அவரது நேர்மையை பாராட்டி ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கினார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வறுமையிலும் நேர்மை தவறாத ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.