நகை திருட்டு போனதாக போலியாக புகார் செய்தவர்களுக்கு போலீசார் அறிவுரை
திருச்சியில் நகை திருட்டு போனதாக போலியாக புகார் செய்தவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.
HIGHLIGHTS
திருச்சி மாநகரில் காணாமல் போன சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 19 பவுன் தங்க நகைகள் இரண்டே நாட்களில் மீட்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றசம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து, குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
கடந்த 10.10.22-ந்தேதி திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமண்டபம் பகுதியில் வீட்டை திறந்து வைத்துக்கொண்டு வீட்டில் இருந்தவர்கள் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் பீரோவில் இருந்த சுமார் 19 பவுன் தங்க நகையை திருடி சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் அலைபேசி எண்களின் விபரங்களை சேகரித்தும், திருச்சி மாநகரம் முழுவதும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் தொடர்ந்து புலன்விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இவ்வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலன்விசாரணையில், சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்ததில் சந்தேக நபர்கள் யாரும் வந்து சென்றதாக தெரியவில்லை, நகைகளை யாரும் எடுத்து போக வாய்ப்பில்லை என்பதை கூறி, காணாமல் போன நகைகளை வீட்டின் மற்ற இடங்களில் தேடிப்பார்க்கும்படி புகார்தாரருக்கு போலீசார் அறிவுறுத்தினார்கள்.
அதன்படி, மேற்படி புகார்தாரர் 11.10.22-ஆம் தேதி காவல் நிலையம் வந்து, தனது வீட்டில் தேடிப்பார்த்ததாகவும், வீட்டிலிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த சேலைக்கு அடியில் காணாமல் போனதாக கூறப்பட்ட 19 பவுன் தங்க நகைகள் அனைத்தும் இருந்ததாகவும், தவறுதலாக மாற்றி வைத்திருந்ததை காணாமல் போனதாக புகார்கொடுத்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தேவையில்லாமல் புகார் அளித்து காவல் துறையினர் மீது கூடுதல் பணியை சுமத்திய புகார்தாரருக்கு போலீஸ் அதிகாரிகள் உரிய அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
மேலும், நிலுவையில் உள்ள அனைத்து திருட்டு வழக்குகளையும் விரைவில் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து, திருட்டுபோன பொருட்களை மீட்கவும், இதுபோன்று குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.