திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை: 2 வழித்தடங்கள் பற்றிய ஆய்வு அறிக்கை
Trichy Metro Train- 2 வழித்தடங்கள் பற்றிய ஆய்வு அறிக்கை
HIGHLIGHTS
Trichy Metro Train-திருச்சியில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க இருப்பது பற்றிய ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போது தலைநகர் சென்னையில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை உள்ளது. மேலும் அங்கு இரண்டாவது மெட்ரோ ரயில் சேவை திட்டமும் விரைவில் துவங்க இருக்கிறது. சென்னை தவிர கோவை, மதுரை, திருச்சி ஆகிய இரண்டாம் நிலை நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை துவங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதன் அடிப்படையில் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவைக்கான வழித்தடங்கள் பற்றிய ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு இந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்ததும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் மத்திய பகுதி மற்றும் இரண்டாம் தலைநகரம் என்ற பெருமைக்குரிய திருச்சியிலும் மெட்ரோ ரயில் சேவைக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இதன் முதல் கட்டமாக திருச்சியில் எந்தெந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயிலை இயக்கலாம் என்பது பற்றி ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. முதல் வழித்தடமானது கோவில் நகரம் எனப்படும் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வரை அமைக்கப்படும். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சத்திரம் பஸ் நிலையம், சிங்கார தோப்பு, தில்லைநகர், கண்டோன்மெண்ட், மத்திய பஸ் நிலையம், ரயில்வே ஜங்ஷன்,கருமண்டபம், எடமலைப்பட்டி புதூர், கேகேநகர், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இதன் மொத்த தூரம் சுமார் 22 கி.மீ ஆகும்.
இரண்டாவது வழித்தடமானது திருச்சி உறையூர்- துவாக்குடி இடையே இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் புத்தூர் நால்ரோடு, அரசு மருத்துவமனை, கண்டோன்மெண்ட், தென்னூர், பாலக்கரை, காந்திமார்க்கெட், பால்பண்ணை, அரியமங்கலம்,ஆயில்மில், காட்டூர், நியூடவுன், எறும்பீஸ்வரர் கோவில், திருவெறும்பூர், பாய்லர் ஆலை (பெல்), பெல் டவுன்ஷிப், அரசு கலைக்கல்லூரி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், என்ஐடி ஆகிய இடங்களில் நின்று செல்லும் . இதன் மொத்த தூரம் சுமார் 23 கி.மீ ஆகும்.
திருச்சியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது திருச்சி மாநகர மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும்.அந்த கோரிக்கை நிறைவேறும் வகையில் மெட்ரோ ரயில் சேவை வர இருக்கிறது. திருச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை வந்தே தீரவேண்டும் என்பதில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரும் தி.மு.க. முதன்மை செயலாளரும், திருச்சி மண்ணின் மைந்தருமான கே.என்.நேரு தீவிரமாக உள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் மெட்ரோ சேவை ரயில் பணிகளுக்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே திருச்சியில்3 இடங்களில் அமைக்கப்பட உள்ள உயர்மட்ட பாலம் தொடர்பான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2