திருச்சி அருகே கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
திருச்சி அருகே கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பங்கேற்று குறைகளை கேட்டறிந்தார்.
HIGHLIGHTS
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவினை முன்னிட்டு 404 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் இன்று (2.10.2022) நடைபெற்றது. அந்தநல்லூர் ஒன்றியம், அந்தநல்லூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் சிறப்புப் பார்வையாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
இக்கூட்டத்தில் இந்த ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகள், வரவு, செலவு கணக்குகள் விவரம் மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மக்களிடம் தெரிவித்து ஒப்புதல் பெறப்பட்டது. பல்வேறு செயல்பாடுகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது கூறியதாவது:-
கிராம மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்ள கிராம சபைக் கூட்டங்கள் சிறந்த தளமாக விளங்குகிறது. கிராமப்புற மக்களின் பிரச்சினைகள், தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்து கொள்வது கிராமசபைக் கூட்டத்தின் சிறப்பம்சமாகும். கிராமங்கள் முன்னேற்றமடைய ஊரக பகுதிகளில், சிறந்த கல்வி, சுகாதாரம், மருத்துவம் மற்றும் சாலை வசதி, வடிகால் வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படுகிறது. கிராம சபை கூட்டத்தில் தங்களது கிராமத்திற்கு தேவையான திட்டங்களை தெரிவித்து தீர்மானத்தின் வாயிலாக கேட்டுப் பெற்றிட வேண்டும். கிராமத்தின் வளர்ச்சிக்கு மக்கள் தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
மேற்கண்டவாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசினார்.
இதனைத் தொடா;ந்து, நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் செயல்பாட்டினைப் பாராட்டி தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சால்வை அணிவித்து பாராட்டினார். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தலா 2.60 லட்சம் மதிப்பீட்டில் மக்கும் மற்றும் மக்காதக் குப்பைகளை தனித்தனியே சேகரிக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் இரண்டு வாகனங்களை பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, ஒன்றியக் குழுத் தலைவர் துரைராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் வனிதா சத்யசீலன், ஊராட்சித் தலைவர் பிரியங்கா, துணைத் தலைவர் கார்த்திக், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜன் பன்னீர் செல்வம் மற்றும் வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.