திருச்சியில் மக்கள் சக்தி இயக்க ஆண்டு விழாவில் மரக்கன்றுகள் வினியோகம்
திருச்சியில் நடந்த மக்கள் சக்தி இயக்க ஆண்டு விழாவில் மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
மக்கள் சக்தியை இயக்கமாக்கிய வரலாற்றுப் பெருமை டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தியை சாரும்.1988-ஆம் ஆண்டு மே. 29-ஆம் நாள் மக்கள் சக்தி இயக்கத்தை அவர் துவக்கினார்.
சுயவளர்ச்சி, சுயபொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய ஈடுபாடு என்ற லட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு இது எனது கிராமம், எனது நாடு என்ற உணர்வோடு நேர்மையான வழியில் கடமை உணர்வோடு ஒவ்வொருவரும் ஆக்க பூர்வமான மனமாற்றத்திற்காக, சமுதாய முன்னேற்றத்திற்காக, பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் சக்தி இயக்கம் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மக்கள் சக்தி இயக்கத்தின் 36 வது தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா பொன்மலையடிவாரம் பகுதியில் நடைபெற்றது. மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில், மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, நிர்வாகிகள் ஆர்.கே.ராஜா,குமரன் ஆகியோர் முன்னிலையில் இந்த விழா நடந்தது.
மரங்கள் மலர்கள், காய், கனிகள் தருகிறது. நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது.காற்றை சுத்தப்படுத்துகிறது. நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.
மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன. ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.
இத்தகைய சிறப்புக்குரிய மரங்களை ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் வளர்க்க வேண்டும் என்பதற்காக விழாவிற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் சந்திரசேகர், வெங்கடேஷ், துரை வண்ணன், ரவி, சுந்தர் மற்றும் பல கலந்து கொண்டு மரக்கன்றுகள் எடுத்துச் சென்றார்.