திருச்சியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
திருச்சியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
திருச்சியில் பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் குழந்தைகள் பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி திருநாளை கொண்டும் வகையில் தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் முதன்மையான தீபாவளி இந்த ஆண்டு வருகிற 24ம்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளிக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருப்பதால் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி போனஸ் தொகையில் நகை வாங்குவதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் புத்தாடை, இனிப்பு வகைகளுக்கு அடுத்து முக்கிய இடத்தை பிடிப்பது பட்டாசு ஆகும். பட்டாசு இல்லை என்றால் தீபாவளி இல்லை என்றே கூறி விடலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த ஆர்வம் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடிப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுவது உண்டு.
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவதற்காக திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலகம் முன்பு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை நிலை அலுவலர் நாகவிஜயன், சிறப்பு நிலை அலுவலர் முருகவேல், முருகானந்தன், பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில் தன்னார்வலரும் முன்னாள் ரயில்வே ஊழியருமான சீனிவாச பிரசாத்தின் 28 ம் ஆண்டு வாகன விழிப்புணர்வு தொடக்க நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்வேறு சமூக நலன் அமைப்புகளின் நிர்வாகிகள் மனித விடியல் மோகன், ஓயிட் ரோஸ் சங்கர், மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ், சமூக சேவகர் பொன் குணசீலன், மக்கள் நல சங்க நிர்வாகி மோகன்ராம், சமூக ஆர்வலர் எழில் ஏழுமலை சாலை பயனீட்டாளர் நல அமைப்பு அய்யாரப்பன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்கள், காய் கனி வணிக வளாகம் முன்பு தீப ஒளி திருநாளில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும், தீ தடுப்பு குறித்தும், தீ விபத்தில் பாதிக்கப்பட்டால் அவர்களை மீட்பது குறித்தும், முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைளை பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர் சீனிவாச பிரசாத் திருச்சி மாவட்ட நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனது இரு சக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயணத்தை தொடங்கினார்.