அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு-தேர்தல் ரேஸில் முதலிடம்
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருப்பதால் நகர்ப்புற தேர்தல் ரேஸில் முதலிடம் பிடித்துள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளின் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்கு பதிவு நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 4ஆம் தேதி கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இறுதி செய்வதிலும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு செய்வதிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரேஸில் முதலிடம் வகிக்கிறது. அ.தி.மு.க. அந்தக் கட்சி சார்பில் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பின்படி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகள், சிதம்பரம் நகராட்சியில் 33, நெல்லிக்குப்பம் நகராட்சியில் 29, பண்ருட்டி நகராட்சியில் 30, விழுப்புரம் நகராட்சியில் 42, விருத்தாசலம் நகராட்சியில் 33, திட்டக்குடி நகராட்சியில் 24, திண்டிவனம் நகராட்சியில் 33, தர்மபுரி நகராட்சியில் 31ஆகிய வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது. தி.மு.க .வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் ரேஸில் முந்திக் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.