திருச்சியில் டிராவல்ஸ் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி பொன்மலைப்பட்டியில் டிராவல்ஸ் உரிமையாளர் கடன் சுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் சித்திக் (வயது 52). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 9 பேரை துபாய்க்கு வேலைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற 9 பேரையும் கொரோனா காரணம் காட்டி துபாய் நாட்டு அரசு மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டதாம். அங்கு இருந்து திரும்பி வந்த ஒன்பது பேரும் சித்திக்கிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
அவர் பணம்தை திரும்ப கொடுக்காததால் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் 9 பேரும் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சித்திக் ரூ.5 லட்சத்தை திருப்பி கொடுத்ததாகவும், மீதமுள்ள ரூ.7 லட்சத்தை இதுவரை கொடுக்க முடியவில்லை என்பதால் மன வேதனையில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் சித்திக் விஷம் குடித்துள்ளார். தகவலறிந்த உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.