எப்போதும்வென்றான் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
எப்போதும்வென்றான் அருகே புகையிலை பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
எப்போதும்வென்றான் அருகே புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஜின்னா பீர்முகமது தலைமையில் உதவி ஆய்வாளர் செந்தில்வேல் முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா மற்றும் காவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று (23.10.2021) சிவஞானபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரம் பகுதியைச் சேர்ந்த சர்க்கரை என்பவரது மகன் அறிவழகன் (42) என்பவர் அவரது வீட்டிற்கு அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.44,300 மதிப்புள்ள 45 கிலோ 200 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.