உடன்குடியில் பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வெப்ப சலனம் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பூமி வெப்பமயமாக தடுக்கவும் மதர் சமூக சேவை நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பிச்சிவிளை கிராமத்தில் கலை அரங்கத்தில் வைத்து மதர் சமூக சேவை நிறுவனம் , லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆகியவை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
மதர் அழகு பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் கோகிலா வரவேற்றார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி முன்னிலை வைத்தார். மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான கென்னடி தலைமை வகித்து, பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு பெண்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினர் கென்னடி பேசியதாவது,
வனவளம் மிகுந்த இந்தியாவில் மாதம் மும்மாரி மழை பொழிந்த வரலாறு என்பது இன்றைக்கு பழங்கதையாகி விட்டது. இந்தியாவின் மழை வளத்துக்குக் காடுகளும் முக்கிய காரணமாக இருந்தன. காடுகள் அழிக்கப்பட்டு அதன் பரப்பளவு சுருங்குவதும் இருக்கின்ற பரப்பளவில் நிமிர்ந்து நிற்கின்ற மரங்களும் அன்றாட வெட்டப்பட்டு வதும் இந்தியக் காடுகளின் சோகக் கதை ஆகிவிட்டது.
மரங்கள் வீடு கட்டுவதற்கும், தொழிற்சாலை அமைக்கவும், மர குச்சிகள் செய்யவும், காகிதங்கள் தயாரிக்கவும், வேறு சில மரங்கள் தீக்குச்சி தயாரிக்கவும், வீட்டு உபயோக பொருட்கள் தயார் செய்யவும் என பல வகை காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் மழை வளம் குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும் காடுகளால் விளையும் நன்மை, தீமைகளையும் பலவகை மரங்கள் கொண்ட காடுகளை வளர்ப்பது அவசியம் ஆகும் என, கென்னடி பேசினார்.
அதனைத் தொடர்ந்து பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடி மரக்கன்றுகள் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி அந்தப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார் . இதில் புங்கை, வேம்பு, பூவரசு, நாவல்,வாடாச்சி, அரசமரம் ஆலமர உட்பட பல வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியை பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள்,மற்றும் மகளிர் சுய உதவி குழு பெண்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
இதில் மதர் பனைப்பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மதர் இளம்பனை பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் அனிதா நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.