கோவில்பட்டி: வீட்டு மனைகளை கையக்கப்படுத்தியதில் நடந்த முறைகேடுகளை சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றால் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
HIGHLIGHTS
கோவில்பட்டி, ஆலம்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் வீட்டுமனைகள் இடம் வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்டுள்ளதில் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக்கோரி தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் நாராணயசாமி பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து வந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் இன்று மனு அளித்தனர்.
பின்னர், தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் நாராணயசாமி மேலும் கூறுகையில், கோவில்பட்டி ஆலம்பட்டி கிராமத்தில் (சர்வே எண் 6/1பி ) வீட்டுமனை இடங்கள் இதே எண்ணில் பலருக்கும் மனைப் பிரிவுகளாக உள்ளன. இந்த இடத்தில் ஒரு சிலர் வீடு கட்டி பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இந்த இடத்தை 1994ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்திற்கு கையகப்படுத்தியுள்ளதாக அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் கிரயம் பெற்றவர்கள் அனைவரும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வீட்டு வசதி வாரியத்திற்கு எதிராக தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், மதுரை நீதிமன்றம் வழக்கு விசாரணை முடியும் வரை இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று வீட்டு வசதி வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், நீதி மன்ற உத்தரவையும் மீறி, திருநெல்வேலி வீட்டு வசதி வாரியம் இந்த இடத்தை காவல்துறையுடன் ஆக்கிரமித்து கம்பி வேலி போட்டுள்ளார்கள். இந்த சம்பவம் கடந்த மார்ச் 9 ஆம் தேதி நடைபெற்றது. 27 வருடங்களாக அனுபவித்து வந்த இடங்களை அப்பாவி பொதுமக்களிடம் இருந்து அபகரித்து, மேற்படி திருநெல்வேலி வீட்டுவசதி வாரிய அதிகாரிகளும், அப்போதைய ஆளுங்கட்சி விஜபிக்களும் ரகசியமாக 1 செண்ட் 2 லட்ச ரூபாய் என்ற விலைக்கு தனியார் ஒருவருக்கு வணிக வளாகம் கட்டுவதற்கு ஏலம் விட்டதாக தெரிகிறது.
பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு வைத்திருந்த இடத்தை அபகரித்து, வணிகவளாகம் கட்டுவதற்கு ஏலம் விட்ட மர்மம் என்னவென்று தெரியவில்லை, தற்போது இடத்தின் சந்தை மதிப்பு ரூ. 10 லட்சமாக உள்ளது. குறைந்த விலைக்கு ஏலம் விட்ட அதிகாரிகள் யார், அவர்களுக்கு துணையாக இருந்த விஐபிகள் யார் என்பதையும், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நீதி கிடைக்க இந்த முறைகேடுகளை சிபிசிஐடி விசாரணை செய்து கண்டறிய உத்தரவிட வேண்டும். இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் தலைமைச்செயலாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் நாராயணசாமி தெரிவித்தார்.