தூத்துக்குடி கோரம்பள்ளம் ஆற்றில் ரூ. 12.50 கோடியில் புனரமைக்கும் பணி துவக்கம்
தூத்துக்குடி கோரம்பள்ளம் ஆற்றை புனரமைத்தல் மற்றும் புதிய திருப்புக்கால்வாய் அமைக்கும் பணிகள் முடிவடைந்தால் உப்பாற்று ஓடை கரையின் இரு புறமும் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
HIGHLIGHTS
தூத்துக்குடி- திருச்செந்தூர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் அமைந்துள்ள வீரநாயக்கன்தட்டு கிராமத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கோரம்பள்ளம் ஆற்றினை புனரமைத்தல் மற்றும் புதிய திருப்புக் கால்வாய் அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வளம்) வசந்தி, தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன், விவசாயசங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி கோரம்பள்ளம் ஆற்றினை புனரமைத்தல் மற்றும் புதிய திருப்புக் கால்வாய் அமைக்கும் பணி ரூ. 12.50 கோடி மதிப்பில் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் ஆறு, உப்பாற்று ஓடை என்னும் பெயரில் கடம்பூர் அருகே மலைப்பட்டி என்னும் கிராமத்தில் சிறு சிறு காட்டோடைகள் இணைந்து ஆறாக உருவெடுத்து ஓட்டப்பிடாரம், தட்டப்பாறை வழியாக தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே சுமார் 32 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கோரம்பள்ளம் குளத்தில் வந்தடைகிறது.
பின்பு கோரம்பள்ளம் குளம் மறுகால் 24 கண் மதகு வழியாக உப்பாற்று ஓடைஎ ன்னும் பெயரில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி துறைமுகம் அருகே வங்காளவிரிகுடா கடலில் கலக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு உப்பாற்று ஓடை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் திடீரென அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டது.
திடீர் வெள்ளம் காரணமாக கோரம்பள்ளம் குளம் அதிகபட்ச நீர்மட்டத்தை எட்டியதால் உபரிநீர் போக்கியில் உள்ள 24 மதகுகள் மூலம் 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. திடீர் நீர்வரத்துகாரணமாககோரம்பள்ளம் குளம் உபரிநீர் போக்கியில் (உப்பாற்று ஓடை) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகளில் உடைப்பு ஏற்பட்டது.
அனைத்து உடைப்புகளும் போர்க்கால அடிப்படையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. காட்டாற்றுவெள்ளத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி, மறவன்மடம், அந்தோணியார்புரம், சுப்பிரமணியபுரம், பெரியநாயகிபுரம், திரு.வி.க.நகர், எஸ்.எஸ்.நகர், காலாங்கரை, அத்திமரப்பட்டி, வீரநாயகந்தட்டு, முத்துநகர், முத்தையாபுரம், கோவில்பிள்ளைநகர் ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் காட்டாற்றுவெள்ளம் புகுந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டன.
இதுபோன்ற பாதிப்புகள் வருங்காலத்தில் வராமல் தடுக்க முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் நிர்வாகஒப்புதல் பெறப்பட்டு நிறுமச் சமுதாயபொறுப்பு நிதியின் மூலம் ரூ. 5 கோடிக்கு கோரம்பள்ளம் குளம் உபரிநீர் போக்கியில் அமைந்துள்ள சிறுபாலங்கள் மற்றும் உள்வாங்கிகள் புனரமைத்தல், அத்திமரப்பட்டி மற்றும் ஜே.எஸ். நகர் குடியிருப்புகளில் வெள்ளப்பெருக்கை தடுக்க கூடுதல் உள்வாங்கிகட்டுதல் மற்றும் வெள்ளப் பாதுகாப்புசுவர் கட்டுதல் மற்றும்பருவமழைகாலத்தில் உப்பாற்று ஓடையில் உள்வாங்கிகள் மற்றும் சிறுபாலங்கள் வழியாகவெள்ளநீர் குடியிருப்புகளில் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் வடிகால் பணிகளுக்கு ஷட்டர் ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது, கோரம்பள்ளம் குளம் உபரிநீர் போக்கியான உப்பாற்று ஓடையின் இருபுறத்தில் உள்ள கரைகளைபலப்படுத்துதல், இடதுபுறத்தில் உள்ள கரைகளை பலப்படுத்துதல், வெள்ளத் தடுப்புச்சுவர் அமைத்தல், மலைப்பட்டி கிராமத்தில் புதிய திருப்புக்கால்வாய் வெட்டும் பணி, ஆரைக்குளம் அணைக்கட்டு 1 மற்றும் ஓட்டப்பிடாரம் பெரியகண்மாய்க்கு செல்லும் வரத்துக் கால்வாயினை புனரமைத்தல் ஆகியபணிகள் ரூ. 12.50 கோடிக்கு தயாரிக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு நபார்டு நிதியின் மூலம் பணிமேற்கொள்ளப்படஉள்ளது.
இந்தப் பணிகள் நிறைவடைந்தால், கனமழையின் போது உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும். உப்பாற்று ஓடை கரையின் இரு புறமும் உள்ள 2200 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் உப்பளங்கள் பாதுகாக்கப்படும். சுமார் 10 கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மண்டலம் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கப்படும். நகரை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பதற்காக அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை தவிர்க்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.