/* */

தூத்துக்குடி மாவட்ட உணவு வியாபாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

கோடை காலங்களில் திரவ உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்ட உணவு வியாபாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் ஜூஸ், இளநீர், சர்பத் மற்றும் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களை அருந்துவது வழக்கம். இந்தநிலையில், திரவ உணவுப் பொருட்களை உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

கோடை காலம் துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு சாறு, கூல்டிரிங்ஸ், ரோஸ் மில்க், மோர் போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும், அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால் பாதுகாப்பற்றக் குடிநீரை திரவ ஆகாரங்களின் தயாரிப்பிற்குப் பயன்படுத்தி அதன் மூலம் தொற்றுநோய்களின் தாக்கம் ஏற்பட சிறிது வாய்ப்பு உள்ளது. எனவே, அந்தத் தொற்றுநோய்களை வராமல் தடுக்க ஏதுவாக திரவ ஆகாரங்களை மிகவும் பாதுகாப்பாக உற்பத்தி செய்து, அவற்றை பாதுகாப்பான சூழலில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கடமை உணவு வணிகர்களுக்கு உள்ளது.

வணிகர்கள் கவனம்:

கோடை கால உணவினை உற்பத்தி செய்து அல்லது விற்பனை செய்யும் அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.

பழரசம், சர்பத், கம்மங்கூழ் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும், நன்னீராகவும் இருக்க வேண்டும். மேலும், உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தினை மஞ்சநீர்காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.

உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும். திரவ ஆகாரங்களைத் தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், கரும்பு சாறு உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களைத் தயாரித்த பின்னர் அதிக நேரம் இருப்பு வைத்திருக்கக் கூடாது. கம்மங்கூழ் போன்ற உணவுப் பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால் அவற்றை அப்புறப்படுத்திடல் வேண்டும்.

திரவ ஆகாரங்களைத் திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது. திரவ ஆகாரங்களை குளிரூட்டப்பட்ட உணவுத் தர “ஐஸ் கட்டியைப்” பயன்படுத்த வேண்டும். உணவுத் தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும் உணவுத் தரமில்லாத ஐஸ் கட்டி “நீல நிறத்திலும்” இருக்கும்.

ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா? என உறுதி செய்து ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை வைக்கோல், சணல் பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடி வைத்திருத்தல் கூடாது. பழரசம் தயாரிக்கப் பயன்படும் பழங்கள் புதியதாகவும் தரமானதாகவும் இருத்தல் வேண்டும். அழுகிய பழங்களை பழரசம் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடாது.

ஏற்கெனவே செயற்கை நிறமி கலந்த சர்பத், கூல்டிரிங்ஸ் போன்றவை தவிர உடனுக்குடன் பரிமாறும் வகையில் தயாரிக்கப்படும் எந்த திரவ உணவுப் பொருளிலும் செயற்கை வண்ணங்களைக் கலக்கக்கூடாது. திரவ ஆகாரங்கள் தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அதனைக் கையாளும் பணியாளர்கள் அனைவரும் தன்சுத்தம் பேணி கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருக்க வேண்டும்.

அவர்கள் “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்” என்பதிற்கு மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும். பதநீரைக் கொள்முதல் செய்து அது கெட்டுப்போகும் முன்னர் விற்பனை செய்திடல் வேண்டும். சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் ஐஎஸ்ஐ முத்திரை பெற்றிருக்க வேண்டும். அவற்றை வெயில் படாதவாறு பதுகாக்க வேண்டும்.

கடையும், அதன் சுற்றுப்புறமும் ஈக்கள், பூச்சிகள் இல்லாமலும், குப்பைகள் இல்லாமலும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும். கூழ், மோர், பால், தண்ணீர் போன்றவை துருப்பிடிக்காத சுத்தமான பாத்திரங்களில் வைத்திருக்கப்பட வேண்டும்.

பழங்கள் சூரியஒளி வெப்பம் படும் வகையில் இருந்தால் தரமும் சுவையும் மாறுபட்டு சீக்கிரம் அழுகிவிடும் தன்மையுடையவை என்பதால் பழங்களை சூரிய ஒளி மற்றும் வெப்பம் படாதவாறு குளிர் பெட்டி அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.

பழரசம், குளிர்பானங்களில் உபயோகப்படுத்தப்படும் சர்க்கரை, சர்க்கரை பாகு முதலியவை தண்ணீர் மற்றும் தூசி படாதவாறு மூடி வைத்து தனியான தேக்கரண்டி கொண்டு சுகாதாரமான முறையில் கையாளப்பட வேண்டும். சாறு எடுக்க பயன்படுத்தும் மிக்ஸி, ஜூசர், வடிகட்டி போன்றவை துருபிடிக்காமலும் தூய்மையாகவும் இருக்க வேண்டும்.

பழரசம், குளிர்பானம், மோர் போன்றவற்றை பாத்திரங்களில் இருந்து கைப்படாத வண்ணம் எடுக்க நீளமான கரண்டி உபபோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும். பழச்சாறு, குளிர்பானங்களை பருக பயன்படுத்தும் ஸ்டராக்கள் உணவுத் தரம் வாயந்ததாகவும், தூசி படாமலும், ஈக்கள் மொய்க்காமலும் மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

திரவ ஆகாரங்களை உணவு தரமற்ற மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்களிலும் கவர்களிலும் வழங்கக்கூடாது. குப்பைகளை போட மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை உபயோகிக்க வேண்டும்.

கோடை காலத்தில் திரவ ஆகாரங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 March 2023 12:02 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  2. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்