/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் கலப்பட பால் குறித்து புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கலப்பட பால் குறித்து புகார் தெரிவிக்க தொடர்பு எண்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் கலப்பட பால் குறித்து புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அமெரிக்கன் ஆஸ்பத்திரி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பால்வளத் துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை மற்றும் மாநகராட்சி ,காவல்துறை அதிகாரிகள் இணைந்து திடீரென சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது, பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பாலை சோதனை செய்ததில் பாலில் தண்ணீர் மற்றும் ரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சுமார் 1500 லிட்டர் பாலை உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:

இதற்கிடையே, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த பால் கேன்களில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சோதனை செய்தார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, பாலில் கலப்படம் செய்வது, தண்ணீர் கலப்பது குற்றம். பாலில் கலப்படம் செய்வதற்காக பவுடர் உள்ளிட்டவற்றை கலப்பது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. அதைக் கட்டுப்படுத்துவதற்காகவும், கலப்படம் இல்லாத பால் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், உணவு பாதுகாப்புத்துறை, பால் வளத்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் காவல் துறை, மாநகராட்சி இணைந்து மாநகராட்சி பகுதியில் கலப்படம் இல்லாத பால் மக்களுக்கு கிடைப்பதற்காகவும், கலப்படம் செய்யப்பட்ட பாலை பறிமுதல் செய்வதற்காகவும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அமெரிக்கன் மருத்துவமனை பகுதிகளில் பாலின் தரம் குறித்து கண்டறியும் கருவிகள் மூலம் சோதனை செய்து 1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுபோல அளவீடு கருவிகளும் முறையாக இல்லை.

500 மில்லி லிட்டர் என்றால் 450 மில்லிலிட்டர் தான் பால் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தரமான பால் சரியான அளவில் சென்றடைவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இந்த நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம்:

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டத்தில் சில்லறையாக விற்பனை செய்யப்படும் பால் தண்ணீர் மற்றும் இதர பொருட்கள் கலந்து கலப்படப் பாலாக விற்கப்படுகின்றது என்றும், அளவும் குறைவாக உள்ளது என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் வருகிறது.

புகாரின் அடிப்படையில், பால் கலப்படம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, உணவு பாதுகாப்புத் துறை, தொழிலாளர் நலத் துறை, பால் வளத்துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஆகிய துறைகளின் அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும், தரமற்ற அல்லது அளவு குறைந்த பால் என்று பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கோ அல்லது “கால் யுவர் கலெக்டர் 8680800900” என்ற புகார் எண்ணிற்கோ புகார் அளிக்கலாம்.

புகார் அளிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும். பால் வணிகர்கள் தரமான பாலை சரியான அளவில் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கத் தவறினால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 March 2023 4:21 AM GMT

Related News