/* */

போலி ரப்பர் ஸ்டாம்ப் மூலம் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய தூத்துக்குடி கும்பல் சிக்கியது எப்படி?

போலி ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் போலி சான்றிதழ்கள் மூலம் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

போலி ரப்பர் ஸ்டாம்ப் மூலம் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய தூத்துக்குடி கும்பல் சிக்கியது எப்படி?
X

போலி ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் போலி சான்றிதழ்கள் மூலம் கைவரிசை காட்டிய தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த வந்தியத்தேவன் (வயது 64) என்பவர், தனது உறவினருக்கு கிரைய ஆவணம் தொலைந்து விட்டதாகவும் அதற்கு காவல் நிலையத்தில் மனு ரசீது பெற்று காவல் நிலைய சான்று பெற உதவி செய்ய யாரேனும் உள்ளனரா என நண்பர்கள் சிலரிடம் விசாரித்து உள்ளார். அப்போது தூத்துக்குடி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் புதியம்புத்தூரைச் சேர்ந்த பொன்ராஜ் (66) என்பவரிடம் அழைத்துச் சென்று உள்ளார்.

பின்னர், திரவியபுரம் மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (56), சிலுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் (59), தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (54), தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் (61) ஆகியோரை வந்தியத்தேவனிடம் அறிமுகம் செய்து ரூபாய் 30,000 பணத்தை பெற்றுக் கொண்டு போலியான தென்பாகம் காவல் நிலைய மனுரசீது வழங்கி உயுள்ளார்கள்.

பின்னர், வந்தியத்தேவன் ஆவணம் தொலைந்து விட்ட சான்று வேண்டி மீண்டும் மகாராஜனிடம் கேட்டபோது அவர் நேற்று வந்தியத்தேவனை அழைத்துக் கொண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பையா முதலியார்புரத்தைச் சேர்ந்த பெருமாள் வீட்டிற்கு அழைத்துச் சென்று வந்தியத்தேவனை வீட்டின் வெளியே நிற்க வைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து வெகுநேரம் ஆனதால் வந்தியத்தேவன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொன்ராஜ், கிறிஸ்டோபர், இம்மானுவேல், பெருமாள், காளீஸ்வரன் மற்றும் தூத்துக்குடி புஷ்பா நகரைச் சேர்ந்த அசோகர் (65) என்பவரும் சேர்ந்து அங்கு பல்வேறு அரசு அலுவலர்களான தாசில்தார், துணை தாசில்தார், தலைமையிடத்து தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், பள்ளி நிர்வாக அலுவலர் போன்றோரின் போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், அவர்களிடம் சொத்துவரி ரசீதுகள், மாநகராட்சி பிறப்பு இறப்பு சான்று, வீட்டுவரி ரசீது, நத்தம் பட்டாக்கள், மருத்துவமனையில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள், கிராம கணக்கு அடங்கல் கணக்கு புத்தகத்தாள்கள் போன்ற பல்வேறு போலிச் சான்றிதழ்களை தயார் செய்து போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை செய்து வைத்துக் கொண்டு போலி ஆவணம் தயார் செய்தது வந்தியதேவனுக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வந்தியதேவன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜியிடம் மோசடி குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில், உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், சிறப்பு உதவி ஆய்வாளர் கதிரேசன், முதல் நிலை காவலர்கள் சரவணகுமார் மற்றும் சமியுல்லா ஆகிய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, போலிச் சான்றிதழ்கள் மற்றும் போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை தயார் செய்து மோசடியாக செயல்பட்ட அசோகர், பொன்ராஜ், கிறிஸ்டோபர், இம்மானுவேல், மற்றும் காளீஸ்வரன் ஆகிய 5 பேரையுயும் உடனடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பல்வேறு போலிச் சான்றிதழ்கள் மற்றும் 80-க்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்தனர்.

போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி பகுதியில் இன்டர்நெட் சென்டர் நடத்தி வரும் மேலும் 2 பேருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான பெருமாள், மகாராஜன் மற்றும் இன்டர்நெட் சென்டர் நடத்தி வரும் 2 பேர் என நான்கு பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

பல்வேறு போலி சான்றிதழ்கள் மற்றும் போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை தயார் செய்து தமிழகம் முழுவதும் மோசடி செயலில் ஈடுபட்ட அசோகர், பொன்ராஜ், கிறிஸ்டோபர், இம்மானுவேல், மற்றும் காளீஸ்வரன் ஆகிய 5 பேரையும் உடனடியாக கைது செய்து அவர்களிடம் இருந்த பல்வேறு போலிச் சான்றிதழ்கள் மற்றும் போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்த தென்பாகம் காவல் நிலைய போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Updated On: 29 March 2023 6:17 AM GMT

Related News