முறப்பநாடு அருகே அரிவாளுடன் அச்சுறுத்தும் நடனம்; வாலிபர் கைது
முறப்பநாடு அருகே அரிவாளுடன் பாெதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடனமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS

அரிவாளுடன் கைது செய்யப்பட்ட வாலிபர்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே அரிவாளுடன் நடனமாடியதோடு மட்டுமில்லாமல், அதனை செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவர் வாளுடன் நடனமாடிய காட்சிகள் பரவியது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ரூரல் டிஎஸ்பி பொன்னரசு மேற்பார்வையில், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், முறப்பநாடு அருகே வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் தர்மதுரை (22) என்பவர் நேற்று அங்குள்ள செல்லியம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரிவாளுடன் பாட்டு போட்டு ஆடியதுடன் அதனை செல்போனில் வீடியோ பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து தர்மதுரையை கைது செய்து அவரிடமிருந்த வாளை கைப்பற்றி பறிமுதல் செய்தார்.