/* */

ஆழ்வார்திருநகரி கோயிலில் திருமலை நாயக்கரின் செப்புப் பட்டயங்கள்

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி கோயிலில் திருமலை நாயக்கரின் செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

ஆழ்வார்திருநகரி கோயிலில் திருமலை நாயக்கரின் செப்புப் பட்டயங்கள்
X

சுவடியியல் அறிஞர் தாமரைபாண்டியன்.

திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நூலாக்கத் திட்டத்தின் பணிக்குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் சுவடிப் பராமரிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது சுருணைஏடுகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சுவடிகளுடன் இந்தக் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் நான்கு செப்புப் பட்டயங்களையும் அவர்கள் கண்டறிந்தனர்.

அதில் இரண்டு மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் கொடுக்கப்பட்டது ஆகும். செப்புப் பட்டயங்கள் இந்த ஊரில் உள்ள காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமானவை ஆகும். அந்த செப்புப் பட்டயங்களை படித்து ஆய்வு செய்த சுவடியியல் அறிஞர் தாமரைப்பாண்டியன் கூறியதாவது:


செப்பு பட்டயங்கள் கி.பி. 17 மற்றும் 19 ஆம் நூற்றாண்டு பட்டயங்கள் ஆகும். இதில் முதல் இரண்டு பட்டயங்கள் மதுரை திருமலை நாயக்கர் காலத்திலும், மற்ற இரண்டு பட்டயங்கள் கோயில் நிர்வாகி மற்றும் முக்கியஸ்தரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டவை ஆகும். முதல் பட்டயம் கி.பி.1637 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இது திருமலை நாயக்கர், வடமலையப்பப் பிள்ளை ஆகியோருக்குப் புண்ணியமாக காந்தீசுவரம் இறைவன் ஏகாந்தலிங்கத்துக்கு சிறு காலைச் சந்திப்பூசையில் அபிசேகமும் நெய்வேத்தியம் செய்யப்பட்ட வழிபாட்டுச் செலவுக்காக இராமப்பய்யனின் ஆணையின்படி, திருவழுதி வளநாட்டைச் சேர்ந்த முனைஞ்சி என்ற மாகாணியின் காணியாளர்களான நாட்டவர்கள் அதே நாட்டைச் சேர்ந்த திருமலைபுரம் என்ற ஊரின் வருவாயினைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்தது ஆகும். 1944-இல் வெளியிடப்பட்ட "திருமலை நாயக்கர் செப்பேடுகள்" என்ற நூலில் இது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது பட்டயத்தில் கி.பி.1671-இல் காந்தீசுவரம் சுவாமி ஏகாந்தலிங்கத்துக்கு பிரதிநாமமாகவும், மகாஜனங்கள், திருமலை நாயக்கர், வடமலையப்பப் பிள்ளை ஆகியோருக்குப் புண்ணியமாகவும் விளங்க தர்மதானப் பிரமாணம் வழங்க வல்லநாட்டு நாட்டவருக்கு வடமலையப்ப பிள்ளை கட்டளையிட்டமையால் அவர்கள் கோயிலுக்கு வழங்கிய நிலதானம் மற்றும் அதன் எல்லை பற்றி கூறப்பட்டுள்ளது.

இரு பட்டயங்களிலும் வழங்கப்பட்ட தானத்தை கெடுக்க நினைப்பவர்கள் நதிக்கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என இறுதியில் குறிப்பிடப்படுகிறது. இவற்றை சிதம்பரநாதன், தன்மகுட்டி முதலியார் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மூன்றாவது பட்டயம் கி.பி.1866 ஜனவரி 23-இல் எழுதப்பட்டுள்ளது. அதில் இந்தக் கோயில் தர்மகர்த்தா ஆழ்வார்திருநகர் கோகில சங்கரமூர்த்தி முதலியாரின் மகள்கள் அங்கரத்தையம்மை, ஆவுடையம்மை ஆகிய இருவரும் அவர்களின் சந்ததியினரும் கோயிலில் நடைபெறும் தைபூச உற்சவத்தின் நாலாந் திருநாள் மண்டகப்படியை தொடர்ந்து வழங்கி நடத்திட வழிவகை செய்யப்பட்டதையும், அந்தக் குடும்பத்தார் ஏகாந்தலிங்க சுவாமிக்கு வெள்ளித் தகடு பதித்த ரிஷப வாகனம் செய்து கொடுத்ததையும், ரிஷப வாகனம் பாதுகாப்பு அறையின் திறவுகோல் ஒன்று ஆவுடையம்மையின் வளர்ப்பு மகன் தானப்ப முதலியாரென்ற சங்கரமூர்த்தி முதலியாரின் வசம் இருந்தது பற்றியும் கூறப்பட்டுள்ளது. அந்தப் பட்டயம் 2 படிகள் உருவாக்கப்பட்டதையும், இதை நயினான் ஆசாரி மகன் சுவந்தாதி ஆசாரி எழுதியதையும் தெரிவிக்கிறது.

நான்காவது பட்டயம் கி.பி.1868 பிப்ரவரி 3-இல் எழுதப்பட்டுள்ளது. அது காந்தீசுவரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலின் விசாரணை கர்த்தாக்களும், ஊர் மக்களும் ஆழ்வார் திருநகரிலிருக்கும் பிச்சன் செட்டியார் குமாரர் நல்லகண்ணு செட்டியார், சர்க்கரை சுடலைமுத்து செட்டியார் குமாரர் ஆழ்வாரய்யன் செட்டியார் ஆகிய இருவரின் பரம்பரையினர் ஏழாம் திருநாள் முதற் கால மண்டகப்படியை வழங்கி நடத்தவும் பட்டு கட்டும் மரியாதை பெற்றுக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது குறித்து கூறுகிறது.

மேலும், மேற்படி குடும்பத்தார் சபாநாயகர் (இறைவன்) எழுந்தருள சப்பரம் செய்து கொடுத்தது பற்றியும் சப்பரம் நிறுத்தி வைக்கப்பட்ட அறையின் இரண்டு சாவிகள் மேற்படி குடும்பத்தார் வசம் இருந்தது பற்றியும் செப்புப்பட்டயம் குறிப்பிடுகிறது. அதை அச்சு பத்திரமாக எழுதியவர் ஆதிநாதரையர் குமாரர் சுப்பையர் எனவும் தெரிவிக்கிறது என தாமரைப்பாண்டியன் தெரிவித்தார்.

Updated On: 22 April 2023 6:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...