வியாபாரிகளின் எதிர்ப்புகளையும் மீறி நகராட்சி சந்தை கடைகள் இடிப்பு
கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நகராட்சி தினசரி சந்தை கடைகளை இடித்து அப்புறப்படுத்தும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய கடை கட்டிடங்களை இடித்து விட்டு ரூபாய் 6 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கடைகள் கட்டிடங்கள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
புதிய சந்தை கட்டுமான பணி நிறைவடையும் வரை தற்காலிக சந்தையானது ஏற்கனவே பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் எனவும் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அங்கு நிறைவேற்றி தரப்படும் எனவும் நகராட்சி நிர்வாகம் அறிவித்தது
ஆனால், வியாபாரிகள் புதிய பேருந்து நிலைய மார்க்கெட்டுக்கு செல்ல மறுத்தும் முறையாக கடைகளை ஒதுக்கீடு செய்து தர வலியுறுத்தியும், புதிய கடை கட்டுமானங்கள் குறித்த வரைபடங்களை பொதுமக்கள் பார்வைக்கு முன் வைக்கவும், தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டுமானம் குறித்து அனைத்து கட்சிகள் வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகத்தின் நிர்வாக குளறுபடிகளை கண்டித்தும் கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நகராட்சி நிர்வாகமும் மார்க்கெட் வியாபாரிகளும் நீதிமன்றத்திற்கும் சென்றனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்ச் 31ஆம் தேதி வழங்கப்பட்ட உத்தரவின் படி இன்று காலை 7 மணியளவில் கடைகளை இடித்தும் அப்புறப்படுத்தும் பணி கோவில்பட்டி வட்டாட்சியர் சுசீலா, நகராட்சி ஆணையர் ராஜாராம் ஆகியோர் தலைமையில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
இப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்கெட் வியாபாரிகளில் ஒரு தரப்பினர் மறியலில் ஈடுபட முயன்றனர். கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான காவல்துறையினர் வியாபாரிகளை குண்டுகட்டாக தூக்கிச் சென்று இழுத்துச் சென்றும் கைது செய்தனர்.
இதையடுத்து தினசரி சந்தை கடைகளை இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.