தூத்துக்குடியில் கருப்பசாமிக்கு மதுபாட்டில்களை படைத்து பக்தர்கள் வழிபாடு
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடைபெற்ற ஆடி மாத கொடி விழாவில், கருப்பசாமிக்கு மதுபாட்டில்களை படைத்து பக்தர்கள் வழிப்பட்டனர்.
HIGHLIGHTS
தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்புதெரு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மாளிகைப்பாறை கருப்பசாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் பூசாரியாக இருப்பவர் முருகன். இவர், இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வருகிறார். இந்த ஆலயத்தில் ஆடி மாத கொடை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் கோயில் கொடி விழா கடந்த 4 ஆம் தேதி கால் நாட்டு விழாயுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக கிடா வெட்டுதல் மற்றும் சுவாமி அரிவாள் மேல் நின்று மதுபானம் அருந்தி அருள்வாக்கு கூறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.
சுவாமியின் அருள் வாக்கை கேட்பதற்காக ஆலய வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் குழுமியிருந்தனர். இதையெடுத்து, மாளிகைப்பாறை கருப்பசாமியாக சாமியாடி அருள் வாக்கு கூறும் பூசாரி முருகன் சாதாரணமாக எளிமையாக வந்து மாளிகைப்பாறை கருப்பசாமியை வணங்கி பின்பு கருப்புசாமியின் உடை அணிந்து அவருக்கு மலர் மாலைகள் சூட்டப்பட்டு கையில் அருவாள் கொடுக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க பொதுமக்கள் கருப்பசாமி.. கருப்பசாமி.. என முழங்க மாளிகைப்பாறை கருப்பசாமியாக, பூசாரி முருகன் மாறினார்.
இதைத்தொடர்ந்து மாளிகைப்பாறை கருப்பசாமி நடனமாடிய கருப்பசாமி கூர்மையான அருவாள் மேல்நின்று பக்தர்களுக்கு காட்சியளித்ததுடன் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த மதுபானங்களை அப்படியே குடித்து அருள்வாக்கு கூறினார். மாளிகைப்பாறை கருப்பசாமி அருள் வாக்கு காரணமாக பலன் பெற்ற பக்தர்கள் ஆண் பெண் குழந்தைகள் இளம்பெண்கள் என ஏராளமானோர் நூற்றுக்கணக்கான மது பாட்டில்களை சாமிக்கு காணிக்கையாக அளித்தனர். கருப்பசாமியின் அருள் வாக்கு மூலம் பலன் பெற்ற பெண் பக்தர் குடும்பத்தோடு வந்து 21 மது பாட்டில்களை சாமிக்கு காணிக்கையாக வழங்கினர்.
மது அருந்தியபடி அருள்வாக்கு கூறிய கருப்பசாமி கோயில் பூசாரி முருகன்.
சுமார் இரண்டு மணி நேரம் ஆடியபடி மதுவை ராவாக குடித்த மாளிகைப்பாறை கருப்பசாமி ‘சைடு டிஷ்’ ஆக எலுமிச்சம் பழம், ஆட்டு ஈரல் ஆகியவற்றை உட்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை பார்த்து அருள்வாக்கு கூறிய மாளிகைப்பாறை கருப்பசாமி பேசும்போது, இந்த ஆண்டு நன்றாக மழை பெய்து நாட்டில் பஞ்சம் இல்லாமல் செழிப்பாக காணப்படும். குடிநீர் பிரச்னை இருக்காது. கருப்பசாமி அனைத்தையும் தீர்த்து வைப்பார் என்று கூறினார்.
மேலும், கருப்புசாமி ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் காணிக்கையாக பணம் பெறுவது கிடையாது. அவர்கள் வேண்டுதலாக கொடை விழாவின் போது மது பாட்டிலை அளிப்பது மட்டுமே காணிக்கையாக உள்ளது என்று கோயில் பூசாரி முருகன் தெரிவித்தார். கொடைவிழாவின்போது மாளிகைப்பாறை கருப்பசாமியாக மாறி பல மது பாட்டில்களில் இருந்த மதுவை அப்படியே குடித்த பூசாரி முருகன் மற்ற நாட்களில் மதுவை துளி கூட தொடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.