சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் வழிபாடு
உலக பிரசித்திபெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு செய்தனர்.
HIGHLIGHTS
உலக பிரசித்திபெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் சரஸ்வதிபூஜை விழாவில் குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கூத்தனூரில் மகாசரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சரஸ்வதி பூஜை விழா ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று தனிக்கோயில் அமைந்துள்ளது கூத்தனூரில்தான். ஒட்டக்கூத்தன் எனும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்று, ஒட்டக்கூத்தன் வழிபட்டதால் கூத்தனூர் என பெயர் பெற்றது.
இந்த வருடம் நவராத்திரி நிகழ்ச்சியை நாட்கள் தொடர்ந்து ஒன்பதாவது நாளான இன்று சரஸ்வதி பூஜை பாத தரிசனம் நடைபெற்றது. சரஸ்வதி கோயிலுக்கு வருபவர்கள் நோட்டு புத்தகம், பேனா, சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துச் செல்வது வழக்கம்.
ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் குழந்தைகளை பெற்றோர்கள் விஜயதசமியன்று இங்கு அழைத்து வந்து சரஸ்வதி அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். இந்த வருடமும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.