world population day collector speech சிறு குடும்பம் சீரான வாழ்வுஉலக மக்கள் தொகை தின விழா: கலெக்டர் பேச்சு
world population day collector speech சிறு குடும்பம், சீரான வாழ்வு என்ற விழிப்புணர்வில் தமிழகம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது என தேனி கலெக்டர் ஷஜீவனா பேசினார்.
HIGHLIGHTS
world population day collector speech
உலக மக்கள் தொகை தின நாளை முன்னிட்டு தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த விழாவில் கலெக்டர் ஷஜீவனா பேசியதாவது: மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகளை பற்றியும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதன் அவசியத்தை பற்றியும், நாட்டு மக்களிடையே எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ‘ஜூலை 11-ஆம் நாளில் உலக மக்கள் தொகை தினம்” அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நமது மாநிலம் குடும்ப நலத் திட்டத்தை செயல்படுத்துவதில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மக்கள் தொகை கட்டுப்படுத்துவதால் அதிகளவில் நன்மைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் நல்வாழ்வு வாழவும், சிறப்பான கல்வி மற்றும் நிறைவான வாழ்க்கை வசதிகளை பெற சிறு குடும்பமே சிறப்பானதாக இருக்கும் என்பதை வழியுறுத்தும் விதமாக மக்கள் தொகையின் தாக்கம் பற்றி அனைத்து தரப்பு பொது மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பணியாற்ற வேண்டும்.
முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி குறித்த புரிதல் மற்றும் ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய்-சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை ஊக்குவித்தல் போன்ற புரிதல்களை தாய்மார்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிப்பது தொடர்பாக பல்வேறு சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்களுக்காக சிறப்பு கருத்தடை(Vascetomy) முகாம் நடைபெற உள்ளது. கருத்தடை மேற்கொள்ளும் ஆண்களை ஊக்குவிக்கும் விதமாக குழுக்கள் முறையில் ஒரு நபரை தேர்ந்தெடுத்து ஒரு தங்க நாணயம் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து உலக மக்கள்தொகை தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கோலப்போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர்கள் மற்றும் பயிற்சி மாணவர்களை பாராட்டி கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக நடந்த உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சிறு குடும்ப நன்மைகள், தாய்-சேய் நலம், ஆணும் பெண்ணும் சமம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியவாறும் ஊர்வலமாக நடந்து சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) ரமேஷ்பாபு, செவிலியர் கல்லூரி முதல்வர் கண்ணம்மாள், துணை இயக்குநர் (குடும்பநலம்) அன்புச்செழியன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) போஸ்கோராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.