வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பில் குழப்பம் ஏன்?
Voter Aadhar Link - தமிழகத்தில் ஏற்கனவே ஒருமுறை வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் நடந்தன.
HIGHLIGHTS
Voter Aadhar Link -வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் தமிழகத்தில் ஏற்கனவே நடந்தன. வாக்காளர்கள் அத்தனை பேரிடமும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆதார் நகல்களை பெற்றனர். ஆனால் இணைப்பு பணிகள் நடந்ததா? என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் நிறைவடைந்தால், இரட்டை ஓட்டுகள் ஒரு ஓட்டமாக மாற்றப்படும். இறந்தவர்களின் ஓட்டுகள் முழுமையாக நீக்கப்பட்டு விடும்.குளறுபடிகள் ஏதும் இ்ல்லாத துல்லியமான வாக்காளர் பட்டியல் தயாரிக்க இந்த பணிகள் உதவிகரமாக இருக்கும்.
நகர்ப்புறமோ, கிராமப்புறமோ சாதாரண பொதுமக்கள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க தயக்கம் காட்டவில்லை. ஆனால் செல்வந்தர்கள், அரசு உயர் அதிகாரிகள், அதிகாரிகள், சமூக அந்தஸ்த்து உள்ளவர்கள், பல கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க தயக்கம் காட்டுகின்றனர். இப்பணியில் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களால் தங்களுக்கு மேல் உயர் செல்வாக்கு, உயர் பதவி கொண்டவர்களிடம் ஆதார் நம்பரை வாங்கி இணைக்க முடியவில்லை.
இதற்கிடையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக செய்திகள் பரவின. இதனை தலைமை தேர்தல் ஆணையம் மறுக்கவும் இல்லை. உறுதிப்படுத்தவும் இல்லை. வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க தயக்கம் காட்டுபவர்கள், மத்திய தேர்தல் ஆணையமே சொல்லிருச்சு...உங்க வேலைய பாருங்க... என கூறி இந்த பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர்.
ஆனால் மாநிலம் முழுவதும் இப்பணிகள் வேகமாக நடக்கின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையில் இணைக்காதவர்கள், தங்களது பணிகளில் சுணக்கம் காட்டுபவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரிவு மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த குழப்பத்தில் சாதாரண கீழ்நிலை அரசு பணியாளர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். மத்திய தேர்தல் கமிஷனும், மாநில தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகங்களும் இது குறித்த உறுதியான வலுவான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2