தேனி : மகளிர் சுயஉதவி குழு கடன்கள் மீது கறார் வசூல் கூடாது; கலெக்டர் அறிவுறுத்தல்
நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்றுள்ள மகளிர் சுய உதவி குழுக்களிடம் கறார் வசூல் கூடாது.
HIGHLIGHTS
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா நோய்தொற்று பாதிப்பினை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொள்ளாமல் சில நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகள் தங்களது ஊழியர்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன்களை உடனடியாக செலுத்துமாறு கறார் வசூலில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டது.
நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகள் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடின போக்கினை கைவிட வேண்டும் என்றும், இதனையும் மீறி சுய உதவி குழுக்களிடமிருந்து புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடனை உடனடியாக திரும்ப செலுத்த வேண்டும் என்று கறார் வசூலில் ஈடுபட்டால் இலவச தொலைபேசி எண் 18001021080-ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.