தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க, ஆசிரியர்கள் கோரிக்கை
தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை விரதம் இருப்பதால், அன்றும் விடுமுறை அளிக்குமாறு ஆசிரியர்கள் கூட்டமைப்பு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
HIGHLIGHTS
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், அமாவாசை விரதம் இருப்பதாலும், வெளியூருக்கு சென்றவர்கள் திரும்பி வருவதில் சிரமம் இருப்பதாலும் விடுமுறை அளிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் அக்-24 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தின் கடைசி இரண்டு நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களாக வருகிறது. அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள், வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று செல்வார்கள். தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடிவிட்டு, 24ம் தேதி மாலையில் பணிபுரியும் இடங்களுக்கு திரும்புவதில் சிரமம் ஏற்படும்.
மேலும் ரயில் மற்றும் பஸ்களில் போதுமான அளவு இடம் கிடைக்காத சூழ்நிலை இருக்கும் எனவும், தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அமாவாசை அன்று விரதம் இருப்பதால், அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்டரிக் ரைமண்ட் தெரிவித்தார்.
ஆசிரியர் நல கூட்டமைப்பின் தலைவர் ஆருணன் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். அதேபோல் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளும் தீபாவளி அன்று மாலையே, ஊருக்கு கிளம்பினால் தான் தாங்கள் படிக்க வேண்டிய இடத்திற்கு போய் சேர முடியும். நாடே தீபாவளி கொண்டாடும் சூழலில், இவர்கள் தீபாவளி அன்று மதியமே ஊருக்கு புறப்படுவது சாத்தியமில்லாதது. இதே சூழ்நிலை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட அத்தனை பணியாளர்களுக்கும் பொருந்தும். குறிப்பாக கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் தீபாவளி கொண்டாட முடியாத நிலை இருந்தது. எனவே இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு, இந்த ஆண்டு தான் தீபாவளி கொண்டாடுகின்றனர்.
இந்த சூழலில் ஒரு நாள் விடுப்பு சேர்த்து கிடைத்தால், மிகவும் நன்றாக இருக்கும். இந்த விடுப்பினை வரும் காலங்களில் ஏதாவது ஒரு சனிக்கிழமை பணிநாளாக மாற்றி, ஈடு செய்து கொள்ளலாம் என கோரிக்கைகளிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.
தவிர, இப்படி ஒரு நாள் சேர்த்து விடுமுறை விடப்படும் போது, போக்குவரத்து தொடர்பான அழுத்தங்களும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. தங்களுக்கு வசதியான நேரத்தில், வெளியூர் பணிக்கு செல்பவர்கள் திரும்ப செல்லவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். எனவே ஆசிரியர்களின் இந்த கோரிக்கையினை தொடர்ந்து மாணவ, மாணவிகளும், பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களும் இந்த கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மத்தியிலும் சாதகமான பதில் உருவாகி உள்ளது. அரசு இது போன்ற நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்கலாம் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.