/* */

போதையின் பிடியில் தமிழகம்...! வட மாநிலத்தவர் வரத்தயக்கம்...?

தமிழகத்திற்கு வேலைக்கு வந்தால் குடித்து நாசமாகி விடுவார்கள் என வடமாநில குடும்பங்கள் நினைப்பதே காரணம் என கூறுகின்றனர்

HIGHLIGHTS

போதையின் பிடியில் தமிழகம்...!  வட மாநிலத்தவர்  வரத்தயக்கம்...?
X

பைல் படம்

தமிழகத்திற்கு வேலைக்கு வந்தால் குடித்து நாசமாகி விடுவார்கள் எனவடமாநில குடும்பங்கள் நினைப்பதே காரணம் என கூறப்படுகிறது.

இது குறித்து தமிழகத்தை சேர்ந்த சில தொழிலதிபர்கள் கூறியதாவது: தமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பது திருப்பூரில் தான். வருடத்துக்குக் கிட்டத்தட்ட பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு குடிக்கிறார்கள். ஏன் இப்படி? ஏனென்றால், திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அவர்களின் கைகளில் பணப்புழக்கமும் அதிகம். குறிப்பாக வார இறுதிகளில் திருப்பூரின் குடி எகிறுகிறது. அதிகபட்ச நிறுவனங்களில் சனிக்கிழமைதோறும் சம்பளம் போடுகின்றனர். வாரச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தால், ஞாயிறு முழுக்கக் குடிதான். திங்கட்கிழமை வரையிலும் இந்தக் குடி நீள்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் குடித்துவிட்டு திங்கட்கிழமைகளில் வேலைக்கு வருவது இல்லை. அன்றும் விடுமுறை போலவே இருக்கிறது என்பதால், திங்கட்கிழமைக்கு 'சின்ன ஞாயிற்றுக்கிழமை' என்று திருப்பூரில் பெயர்.

'இதை ஞாயிறு, திங்கள்னு பார்க்கிறதைவிட, கையில காசு தீர்ந்துபோற வரைக்கும் குடிப்பாங்கன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்காக வார சம்பளத்தைப் பத்திரமா வெச்சுக்கிட்டு வாரம் முழுக்கக் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறது இல்லை. அந்த ரெண்டு நாள்ல வெறியோட குடிச்சுட்டு செவ்வாக்கிழமை வேலைக்குப் போறது... அடுத்த அஞ்சு நாளைக்கு வேலை பார்த்துட்டு மறுபடியும் குடி. அதாவது இவங்க வேலை பார்க்கிறதே குடிக்கத்தான்னு ஆயிடுச்சு...' என்கிறார் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றின் மேனேஜர் சோலைமலை.

அப்படியானால் ஞாயிறு, திங்கள் தவிர்த்த மற்ற நாட்களில் குடிப்பது இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. அந்த இரண்டு நாட்களிலும் அதி தீவிரக் குடி; மற்ற நாட்களில் தீவிரக் குடி. அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காக கம்பெனியில் இருந்து வார நாட்களில் முன்பணம் வாங்கிக்கொள்கின்றனர். முன்பணம் வாங்காத தொழிலாளர்கள் மிகமிகக் குறைவு. ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் முன்பணம் வாங்கி, மரணத்தை நோக்கி தவணைமுறையில் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இப்படி குடியின் பிடியில் சிக்கித்தான் உள்ளனர். திருப்பூர் மட்டும் இதில்சிறப்பிடம் பெற காரணம் உள்ளது. முதல் காரணம், இங்கு இருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இங்கு உதிரிகளாகத்தான் வாழ்கின்றனர். 'இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் குடிச்சே அழிச்சியன்னா, பொண்டாட்டி, புள்ளைங்களை யார் பார்க்குறது?' என்று கேள்வி கேட்க நெருங்கிய உறவுகள் யாரும் அருகில் இல்லை. கசக்கிப் பிழியும் வேலையின் காரணமாக நண்பர்கள்கூட இவர்களுக்கு இருப்பது இல்லை. ஒரு மனிதன் சமூகத்துடன் இணையும் புள்ளி எதுவும் கிடையாது.

மேலும், சொந்த ஊரில் இருந்தால் கல்யாணம், காட்சிக்குப் போக வேண்டும்; மொய் செய்ய வேண்டும்; ஊர்த் திருவிழா, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செலவு வரும் என்பன போன்ற அன்றாட நெருக்கடிகள் இருக்கும். சம்பாதித்த பணத்தை அதற்கென செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இங்கு அது இல்லை. இரண்டாவது, வேலை கிடைப்பது குறித்த அச்சம் தொழிலாளர்களுக்கு இல்லை. இந்த வாரம் ஒரு கம்பெனி, அடுத்த வாரம் ஒரு கம்பெனி என்று போய்க் கொள்ளலாம். எங்கும் எப்போதும் வேலை தயாராக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையைத் தருகிறது. இப்போது கையில் இருப்பதைக் குடித்து அழித்தாலும், நாளையே சம்பாதித்துவிட முடியும் என எதிர்மறையான நம்பிக்கை கொள்கின்றனர்.

அதே நேரம் இந்தச் சிக்கலை தொழிலாளர்களின் கோணத்தில் இருந்து மட்டும் மதிப்பிடுவது சரியற்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 'வெறுங்கையோடு திருப்பூருக்குப் போனால் உழைத்து முன்னேறலாம்' என்ற நிலை இருந்தது. அது உண்மையும்கூட. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்படி திருப்பூரில் உழைத்து முன்னேறினார்கள் என்பது நமக்குத் தெரியும். ஒற்றை ஆளாக திருப்பூர் வந்து கடும் உழைப்பால் சொந்த ஊரில் நிலபுலன் வாங்கி, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துகொடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்று அப்படியானவர்களைப் பார்ப்பது அரிது. முன்பு, வாங்கிய சம்பளம் குடும்பத்துக்குப் போனது. இப்போது நேராக டாஸ்மாக் செல்கிறது. 'ஏழைத் தொழிலாளர்கள் உழைக்கும் பணத்தை, குடியின் பெயரால் இந்த அரசு வழிபறி செய்கிறது' என்ற குற்றச்சாட்டு எவ்வளவு உண்மை என்பதை திருப்பூரில் கண்கூடாகப் பார்க்கலாம்.

ஒரு பனியன் நிறுவனத்தின் கோணத்தில், தொழிலாளர்களின் குடி அவர்களைப் பாதிக்கிறதா? 'நிச்சயம் பாதிக்கிறது'. 'ஒவ்வொரு திங்கட்கிழமையும் உற்பத்தித் திறன் கணிசமாகக் குறைகிறது. மற்ற வார நாட்களை ஒப்பிட்டால், திங்கட்கிழமை அன்று 40 சதவிகித உற்பத்தி குறைகிறது. குடிக்கு அடிமையான ஒரு தொழிலாளியால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. அவரது வேலை செய்யும் திறன் மோசமாகக் குறைந்துகொண்டே செல்கிறது. அவரால் வேலையில் கவனம் செலுத்த முடிவது இல்லை. அதேபோல நைட் ஷிஃப்ட் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, குடியின் காரணமாக கணிசமாகக் குறைந்துவிட்டது.

அதையும் மீறி வந்தாலும் குடித்துவிட்டு வருகின்றனர். இதனால் நைட் ஷிஃப்ட்டில் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பணிபுரிய பல நிறுவனங்கள் அனுமதிப்பது இல்லை. வேலை முடிந்து, பேருந்தில் டிராப் செய்ய போகும்போது, 'கடையை மூடிருவாங்க... சீக்கிரம், சீக்கிரம்' என டிரைவரை தொழிலாளர்கள் அவசரப்படுத்துகின்றனர். அதே நேரம் குறைந்த ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் மட்டும்தான் குடிக்கிறார்கள் என்பதல்ல... கம்பெனியில் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர் ஒருவர், வாங்கும் சம்பளத்தில் 30 ஆயிரத்தை குடித்தே அழிப்பார். மாலை 7 மணிக்குப் பிறகு எவ்வளவு தலைபோகும் வேலையாக இருந்தாலும் அவரைப் பிடித்துவைக்க முடியாது

. இப்படி தொழிலாளர்கள், முதலாளிகள் என திருப்பூரின் அனைத்துத் தரப்பினரையும் குடி, மோசமாகப் பாதிக்கிறது. இது திருப்பூரின் கதை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் தேவை அதிகம் இருக்கிற அனைத்து இடங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. இது தவிர புதுப்பிரச்னையும் முளைத்திருக்கிறது. முன்பு போல் வடமாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு வேலைக்கு வருவில்லை. அவர்களின் குடும்பத்தினர் வரவும் அனுமதிப்பதில்லை. காரணம் தமிழகத்திற்கு சென்றால் இவர்களும் குடித்தே அழிந்து விடுவார்கள் என வடமாநில குடும்பத்தினர் நினைப்பதால், அவர்களை தமிழகத்திற்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். இதனால் வடமாநிலத்தவர் தமிழகத்திற்கு வேலைக்கு வருவது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

இந்த குடிப்பழக்கத்தால் மேலும் பல பக்க விளைவுகளும் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளன. குடிப்பழக்கம் உள்ள தொழிலாளர்கள் திடீர், திடீரென வேலைக்கு மட்டம் போட்டுவிடுகின்றனர். அவர் ஒரு கடையின் புரோட்டா மாஸ்டராக இருந்தால், அன்று அந்தக் கடையின் வருமானம் கெடுகிறது. அல்லது அவசரஅவசரமாக வேறொரு மாஸ்டரை ஏற்பாடு செய்ய வேண்டும். உணவுப் பொருளின் சுவை சீராக இல்லை எனில், வாடிக்கையாளரைத் தக்க வைக்க முடியாது. ''அதுக்காக குடிக்கிற ஆளைக் கண்டிக்கவும் முடியாது. உடனே நின்னுடுவார். கண்டும், காணாதது மாதிரி போகவேண்டியிருக்கு'' என்கிறார்கள் சிறுதொழில் நடத்துபவர்கள். இப்படித் தொடர்ந்து குடிக்கும் தொழிலாளர்களின் வேலைத்திறன் மோசமாகப் பாதிக்கப்படுகிறது என்றால், குடிப்பதையே ஒரு வேலையாகச் செய்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

இப்போது மாலை 6 மணி என்று வைத்துக் கொள்வோம். மாநிலம் முழுக்க இருக்கும் 4,000-த்துக்கும் அதிகமான டாஸ்மாக் பார்களில் அமர்ந்து குறைந்தபட்சம் 50 லட்சம் (அதிகபட்சம் ஒரு கோடியை எட்டும்) பேராவது குடித்துக்கொண்டிருப்பார்கள். அதாவது, சமூகத்தின் உற்பத்தியில் பங்கேற்க வேண்டிய 50 லட்சம் மனித ஆற்றல்கள், சமூகத்தின் அழிவில் பங்கேற்கின்றன. பல மகத்தான அதிசயங்களை நிகழ்த்தவல்ல கோடிக்கணக்கான இளைஞர் கூட்டம் நம் கண் முன்னே குடித்துக் குடித்தே வீழ்கிறது. முன்பு எல்லாம் குடித்துவிட்டு சாலையில் வீழ்ந்துகிடப்பவர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பார்கள். இப்போது டாஸ்மாக் இருக்கும் ஒவ்வொரு வீதியிலும் இரண்டு பேர் போதையில் மல்லாந்து கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பகுதி, இளைஞர்களாக இருப்பது இன்னும் கொடுமை.

உண்மையில் நாம் ஒரு தலைமுறையையே குடிகாரர்களாக மாற்றியிருக்கிறோம். ஒரு தலைமுறை இளைஞர்களின் உடல்களில் இருந்து ரத்தத்தை உறிஞ்சி, ஆல்கஹாலை செலுத்திக்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஆயிரம் ஆயிரமாக, லட்ச லட்சமாக நோயில் வீழ்ந்து மடிந்து போகிறார்கள். உடல் சிதைந்து உறுப்புகள் உருக்குலைந்து உயிரின் வேதனையில் மரணத்துக்காக ஏங்குகின்றனர் என்பதே உண்மை. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் விவரங்களை சேகரித்தால் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கும் என்றார் அவர்.

Updated On: 21 Sep 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  2. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  4. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...
  5. சினிமா
    ஹாலிவுட் ரீமேக்கில் கமல், ரஜினி..! இயக்குநர் லோகேஷ் கனகராஜாம்..!
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  8. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  9. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!