கோடை உழவு செய்யுங்கள்...விவசாயிகளுக்கு அறிவுரை
தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்யுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
HIGHLIGHTS
இதுகுறித்து தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன் கூறியதாவது:
தற்போது தேனி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும். மண்ணை உழவு செய்யும் போது முதலில் சூடாகி பின்னர் குளிர வேண்டும். இது தான் மண்ணை பக்குவப்படுத்தும் தத்துவம். இதற்கு கோடை உழவு சிறந்தது.
கோடை உழவுக்கு சட்டிக்கலப்பை பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் இதன் மூலம் மண்ணி்ல் மறைந்திருக்கும் தீமை தரும் பூச்சிகள், கூண்டுப்புழுக்களை அழித்து விடலாம். மண் வளத்தை பாதிக்கும் களைச்செடிகளையும் அதன் விதைகளையும் அழித்து விடலாம். இப்போது பெய்யும் மழைநீர், வளிமண்டலத்தில் நிறைந்துள்ள நைட்ரேட் என்ற வேதிப்பொருளுடன் இணைந்து மண்ணில் கலந்து தழைச்சத்தினை அதிகரிக்க செய்யும்.
பொதுவாக வளிமண்டலத்தில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கும். நீண்ட காலத்திற்கு பிறகு பெய்யும் கோடை மழையில் அந்த சத்துக்கள் மண்ணிற்கு வந்து சேரும். உழவு செய்து தயாராக வைத்திருந்தால், அந்த சத்துக்களை மண் எளிதில் கிரகித்துக் கொள்ளும். இதனால் நிலம் வளமாகும். விதைகள் முளைத்து நல்ல மகசூல் கிடைக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.