சென்னையில் காலமான ஓ.பி.எஸ்., மனைவியின் உடல் சொந்த ஊரில் தகனம்
சென்னையில் காலமான ஓ.பி.எஸ்., மனைவியின் உடல் சொந்த ஊரான பெரியகுளத்தில் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.
HIGHLIGHTS

அலங்கார ரதத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ஓ.பி.எஸ்., மனைவியின் உடல்.
சென்னையில் நேற்று காலை காலமான முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மனைவியின் உடல் இன்று அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சின் சொந்த ஊர் பெரியகுளம். பெரியகுளத்தில் அவர்களுக்கு இரண்டு வீடுகள் உள்ளன. சென்னையில் நேற்று காலை இறந்த ஓ.பி.எஸ்., மனைவி விஜயலட்சுமியின் உடல் நேற்று இரவு பெரியகுளம் கொண்டு வரப்பட்டது.
தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல ஆயிரம் பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, கே.சி.மணி உட்பட ஏராளமானோர் பெரியகுளத்தில் தங்கி ஓ.பி.எஸ்., மனைவியின் இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றனர்.
பல ஆயிரம் பேர் பங்கேற்ற இறுதி ஊர்வலம் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. பின்னர் பெரியகுளம் சுடுகாட்டில் சரியாக மாலை 3.20 மணிக்கு தனது தாய் உடலுக்கு மூத்த மகனும், தேனி லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான ரவீந்திரநாத்குமார் தீ மூட்டினர்.