ஒரு லட்சம் பேருக்கு ஒரே ஒரு கிராம நிர்வாக அலுவலர்: மக்கள் அவதி
ஒரு லட்சம் பேருக்கு ஒரே ஒரு கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே பணியில் இருப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
HIGHLIGHTS
தேனி நகராட்சியின் மக்கள் தொகை 2011ம் ஆண்டு கணக்குப்படியே ஒரு லட்சத்தை எட்டியது. தற்போது இன்னும் 10 சதவீதம் வரை அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஒரே ஒரு கிராம நிர்வாக அலுவலர். அவருக்கு இரண்டு ஓ.ஏ க்கள் மட்டுமே உள்ளனர்.
ஜாதிச்சான்று, திருமண சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், தரிசு நிலம், விதவை சான்று, ஆதரவற்ற விதவை சான்று என அரசு வழங்கும் எந்த சான்றுகளாக இருந்தாலும் வி.ஏ.ஓ.விடம் இருந்து தான் தொடங்க வேண்டும். காப்பீடு திட்டம் முதல் ரேஷன் கடை வரை வி.ஏ.ஓ. அனுமதியின்றி எதுவுமே நடக்காது. இது தவிர அவ்வப்போது அரசு வழங்கும் அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும்.
மழை பெய்தால் கண்மாய்களை கண்காணிப்பது முதல், அனாதை பிணங்கள் வரை அத்தனையும் வி.ஏ.ஓ. பொறுப்பில் தான் உள்ளது. எனவே பணிச்சுமை, மனஅழுத்தம் காரணமாக தேனி வி.ஏ.ஓ.வும், அவரது பணியாளர்களும் திணறி வருகின்றனர். இந்த சிக்கலை தீர்க்க வி.ஏ.ஓ. நிர்வாக பகுதிகளுக்கான எல்லை வரையரையினை மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயித்து மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.