ஆண்டிபட்டியில் நர்ஸ் மர்மக்கொலை பணம், நகைக்காக நடந்ததா என விசாரணை?
ஆண்டிபட்டியில் நர்ஸ் கொலை செய்யபட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தில் நர்ஸ் ஒருவர் நேற்று இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.
ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் செல்வி, 46. இவர் பாப்பம்மாள்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவர், மகன், குழந்தைகள் திண்டுக்கல்லில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் பணி முடித்து திரும்பி வீட்டிற்கு சென்ற செல்வி, அதன் பின்னர் வெளியே வரவில்லை. இரவில் அவரது கணவர் சுரேஷ் மற்றும் உறவினர்கள் போன் செய்துள்ளனர். செல்வி போனை எடுக்கவில்லை. நேற்று இரவு சந்தேகம் அடைந்து 9.30 மணிக்கு கதவை உடைத்து பார்த்த போது பூஜை அறையில் ரத்தவெள்ளத்தில் செல்வி பிணமாக கிடந்தார்.
உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டிபட்டி டி.எஸ்.பி., தங்ககிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீஸ் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போலீசார் விசாரணையில் மெத்தனம் காட்டுவதாகவும், தாங்கள் சந்தேகப்படும் நபர்கள் யாரையும் போலீசார் விசாரிக்கவில்லை எனவும் இறந்த நர்ஸ் உறவினர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.