லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலையில் விபத்து மீட்பு ஒத்திகை
தமிழக கேரள எல்லையில் குமுளி அருகே நிலச்சரிவு மற்றும் விபத்து மீட்பு குறித்த ஒத்திகை அரசு துறைகளின் சார்பில் நடத்தப்பட்டது..
HIGHLIGHTS
தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் உள்ள லோயர்கேம்ப் குமுளி மலைச்சாலையில் மழைக்காலங்களில் ஏற்படும் நிலச்சரிவு மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்படும் வாகன விபத்துகளில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி நடந்தது. போலீஸ்துறை, தீயணைப்புத்துறை வருவாய்த்துறை மற்றும் வனத்துறை சார்பில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.
உத்தமபாளையம் கோட்டாட்சியர் கௌசல்யா தலைமை வகித்தார். பேரிடர் காலங்களில் செயல்படும் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் தேசிய மேலாண்மை பேரிடர் குழு அமைப்பினர் வந்திருந்தனர். குமுளி மலைச்சாலையில் உள்ள மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் ஒத்திகை நடத்தப்பட்டது. செயற்கையாக ஒரு விபத்து ஏற்படுத்தப்பட்டது. விபத்தை அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த பால்காரர் பார்த்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அரசுத்துறையினர் மலைச்சாலையில் விபத்தில் சிக்கி இருக்கும் மக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து செயல்முறை விளக்கங்களை நேரடியாக செய்து காண்பித்தார்கள்.
இந்த ஒத்திகையின் போது, ஒவ்வொரு விபத்தின் போதும், மீட்பு பணிகளுக்கு தேவைப்படும் அத்தனை நவீன மற்றும் அவசர உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்து, மருத்துவமனைகளுக்கு அனுப்புவது வரை அத்தனை பணிகளும் துல்லியமாக நடந்தன.