/* */

மலரும் நினைவுகள்.......... உங்களுக்கு எம்ஜிஆரைப் பிடிக்குமா? மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் ...பேட்டி...2014ல்....படிங்க...

Jayalalitha Interview-"பொதுவாக யாரோடும் நானாக சண்டை போடுவதில்லை. ஆனால் வலுச்சண்டைக்கு யாராவது இழுத்தார்கள் என்றால் நான் சும்மா இருப்பதில்லை. வாழ்க்கை என்னை அப்படி மாற்றியிருக்கிறது.”என பேட்டியில் மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதா பேட்டியில் அப்போதே தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

Jayalalitha Interview
X

Jayalalitha Interview

Jayalalitha Interview-மேற்சொன்ன வாக்கியம் ஜெயலலிதாவால் 1999- சிமி கர்வாலுக்கு அளித்த ஒரு பேட்டியில் சொல்லப்பட்டது. அந்த நேர்காணல் எடுக்கப்பட்டு பல வருடங்கள் ஆனபோதும் கூட அப்போது அவர் சொன்ன கருத்துகளில் துளியளவும் மாற்றமிருந்ததில்லை. அதனாலேயே இந்தக் கட்டுரை மொழிபெயர்க்கப்படுகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிறுவயதில் தனது தாய் சந்தியாவுடன் (அடுத்த படம்)பள்ளிப்பருவத்தில் பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் அனைத்திலும் முதல் மாணவியாக திகழ்ந்தார்.வென்ற கோப்பையுடன் ஜெயலலிதா (கோப்பு படம்)

கே:உங்களுக்கு கோபமே வந்ததில்லையா?

கோபமும் , உணர்ச்சிகளும் இல்லையென்றால் நான் சாதாரண மனுஷியாக இருந்திருக்க முடியாது. ஆனால் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும்போது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.எனது உணர்ச்சிகளை எனக்குள் மட்டுமே வைத்துக் கொள்வேன். அதை நான் வெளிக் காட்டுவதில்லை. நான் என் வசத்தைத் தொலைப்பதில்லை. பொது இடங்களில் அழுததுமில்லை. எனக்கு மனோதிடம் அதிகம்.

கே:ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிற அரசியலில் ஒரு பெண்ணாக நீங்கள் முன்னேறியிருப்பது மிகுந்த சிரமமாக இருந்திருக்கும் இல்லையா? அதனால் தான் கடினமானவராக இருக்கிறீர்களா?

இப்படித் தான் இருக்க வேண்டுமென நான் நினைத்ததில்லை. ஆனால் என்னுடைய செயல்களும், ஒவ்வொரு விஷயத்தையும் நான் எதிர்கொண்ட விதமும் என்னை கடினமானவராகக் காட்டியிருக்கிறது.

மறைந்த ஜெயலலிதா தனது 4ம் வகுப்பில் படித்த போது எடுத்த படம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளவர்தான் ஜெயலலிதா (கோப்பு படம்)

கே:அரசியல் தான் உங்களை கடினமாக்கியிருக்கிறது என நினைக்கிறீர்களா?

ஆமாம். நான் இப்படிப்பட்டவளே கிடையாது. கூச்ச சுபாவமுடையவளாக இருந்தேன். புது மனிதர்களை சந்திப்பதற்கே பயப்படுவேன். எனக்கு புகழ் வெளிச்சமே பிடிக்காது. இது ஆச்சரியமானது தான். எனது வாழ்க்கை விதி என்னை இரண்டு உயரமான துறைகளுக்கு அழைத்து வந்துள்ளது. ஆனால் நான் திரைக்குப் பின்புலமாக செயல்படவே விரும்பியிருக்கிறேன்.

கே:உங்களது சிறு வாழ்க்கை கூட இப்போதுள்ள நிலைக்கு அஸ்திவாரமாக இருந்திருக்கலாம்?

இல்லை நான் பாரம்பரியமான பின்னணியில் வளர்க்கப்பட்டிருந்தேன். எனது தாத்தா, பாட்டியிடம் பெங்களூரில் வளர்ந்தேன். தமிழ் அய்யங்கார் குடும்பத்துப் பெண் நான். ஐந்து வயதாக இருக்கும்போது அவ்வப்போது என்னைப் பார்க்க அம்மா பெங்களூருவுக்கு வருவார். என்னைத் தூங்க வைத்துவிட்டு கிளம்பிவிடுவார் அம்மா. அதற்காக தூங்கும்போது அம்மாவின் முந்தானையை என் கையில் சுற்றிக் கொண்டு தூங்குவேன்.

அதனால் அம்மா மெதுவாக தனது புடவையை எனது அத்தைக்கு உடுத்திவிட்டுப் போய்விடுவார். நான் எழுந்து பார்க்கும்போது அம்மா இல்லை என்று தெரிந்ததும் அழுவேன், அழுவேன் அழுதுகொண்டே இருப்பேன். மூன்று நாட்களானாலும் என்னை யாரும் சமாதானப்படுத்த முடியாது.

முன்னாள் முதல்வர்கள் ஜானகி எம்ஜிஆர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா (கோப்பு படம்)

பெங்களூருவில் இருந்த நான்கு வருடங்களிலும் ஒவ்வொரு நிமிடமும் அம்மாவுக்காக ஏங்கியிருக்கிறேன். எனக்கு கிடைக்க வேண்டிய, தேவைப்பட்ட அன்பு அம்மாவிடமிருந்து அப்போது கிடைக்காமல் போனது. பத்து வயதாக இருக்கும்போது சென்னைக்கு வந்த நேரம் அம்மா ரொம்ப 'பிஸி'. காலையில் நான் எழுந்து கொள்வதற்கு முன்பே வேலைக்குப் போய்விடுவார். பெரும்பாலான நாட்கள் நான் தூங்கிய பிறகு தான் வீட்டுக்கு வருவார்.

ஒரு சம்பவம் நினைவில் இப்போதும் இருக்கிறது. ஒருமுறை பள்ளியில் நடந்த ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. பரிசையும், கட்டுரையையும் அம்மாவிடம் காட்ட வேண்டுமென்று நான் வெகுநேரம் வரை இரவு காத்திருந்தேன். நடு இரவாகிவிட்டது அம்மா வருவதற்கு. நான் ஹாலில் சோபாவில் படுத்துத் தூங்கிவிட்டேன். அம்மா வந்ததும், 'என்ன இங்கே படுத்துக் கொண்டிருக்கிறாய்?' என்று எழுப்பிக் கேட்டார். கையிலேயே வைத்திருந்த பரிசையும், கட்டுரையையும் காட்டிவிட்டு தான் தூங்கப்போனேன்.

கே:எம்ஜிஆர் உங்கள் வாழ்க்கைக்குள் வந்த பிறகு தான் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. 28 படங்கள் சேர்ந்து நடித்திருக்கிறீர்கள். அவர் தான் உங்களை அரசியலுக்கு அழைத்து வந்தார். எம்.ஜி.ஆரை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?

எம்ஜிஆருடன் யார் பழகினாலும் அவரைப் பிடிக்கும். அத்தனை வசீகரமானவர் அவர். சின்ன வயதில் எம்ஜிஆர் நடித்த படம் பார்க்கப் போவோம். அவருடைய படங்களில் எப்போதும் ஒரு வாள் சண்டை இருக்கும். வீட்டுக்கு வந்ததும் நானும் என் அண்ணனும் ஆளுக்கு ஒரு கம்பை எடுத்துக் கொண்டு வாள் சண்டை போடுவோம். எப்போதும் நான் எம்ஜிஆராகவே இருப்பேன். அண்ணன் தான் பி.எஸ். வீரப்பா. கடைசியில் நான் தான் ஜெயிப்பேன். ஏனென்றால் நான் தானே எம்ஜிஆர். அப்போதிலிருந்தே கதாநாயக வழிபாடு தொடங்கிவிட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ,ஜெயலலிதா (கோப்பு படம்)

கே:தனிப்பட்ட முறையில் அவர் எப்படிப்பட்டவராக இருந்தார்? அவர் எங்களுக்கு புதிரானவராகேவே இருக்கிறார்?

அவர் ரொம்ப கனிவானவர். அக்கறை எடுத்துக் கொள்பவர். அம்மா இறந்ததும் அவர் தான் அந்த இடத்தை நிரப்பினார். அவர் தான் எனக்கு எல்லாமுமாகவே இருந்தார். அப்பாவாக, அம்மாவாக, வழிக்காட்டியாக, குருவாக.

கே:அவர் உங்களை ஆதிக்கம் செலுத்தினாரா?

என்னுடைய அம்மா, எம்ஜிஆர் இருவருமே வலுவான குணம் கொண்டவர்கள். அம்மா இருக்கும் வரை அம்மாவின் ஆதிக்கம் இருந்தது. எம்ஜிஆர் இருக்கும்வரை அவர் முழுமையான ஆதிக்கம் செலுத்தினார். அவருடைய அறிவு, குணம் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர் என்பதால் அவர் மீது எனக்கு இரக்கமும் உண்டு.

கே:நீங்கள் இதுவரை எதிர்பார்ப்பில்லாத அன்பை அனுபவித்திருக்கிறீர்களா?

இல்லை. எதிர்பார்ப்பில்லாத அன்பு என்று ஒன்று இருப்பதாகவே நான் நம்பவில்லை. புத்தகத்திலும், திரைப்படங்களிலும் மட்டுமே அப்படியான அன்பு காட்டப்படுகிறது. நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை. நான் அப்படி எதையும் சந்தித்ததில்லை.

கே: ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த துறை என எதைச் சொல்வீர்கள் அரசியலா, திரைப்படமா?

இரண்டுமே தான். ஆனால் திரைப்படங்களில் பெண் என்பவள் அதி அவசியமான ஒரு பொருள். உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ ஈர்ப்புக்காக பெண்களைத் திரைப்படங்களில் பயன்படுத்தியாக வேண்டும். வேறு வழியே இல்லை. ஆனால் அரசியலை பெண்கள் இல்லாமலே நடத்த முடியும். அவர்களை இல்லாமலாக்குவதற்கு முயற்சி செய்ய முடியும். ஆனால் என்னைப் போன்ற பெண்களை சர்வசாதரணமாக ஒதுக்கித் தள்ளி விடமுடியாது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , தற்போதைய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன்(கோப்பு படம்)

கே:பெண்கள் ஒரு துறையில் வெற்றிப் பெற்றால் உலகம் உடனேயே ஆண் தான் அதற்குப் பின்புலம் என்று சொல்லிவிடும். நீங்கள் சந்தித்த போராட்டங்களும், வெற்றிகளும் எம்ஜியார் இறந்தபிறகே நடந்திருக்கிறது?

நீங்கள் சொல்வது ரொம்ப சரி. எம்ஜியார் இருக்கும் வரை தலைவராக இருந்தார். அவரது வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். அவர் இறந்தபிறகு நான் தனியாளானேன். அவருக்கு அடுத்து நான் வருவதற்கு எனக்கு சுலபமான வழியை தந்துவிட்டு அவர் போகவில்லை.

ஆசியாவில் அதிகாரத்திற்கு வந்த அத்தனைப் பெண்களையும் பாருங்கள். அவர்கள் ஒரு தலைவருக்கு மனைவியாகவோ, மகளாகவோ இருப்பார்கள். ஏனெனில் ஒரு மனைவியாக இருந்திருந்தால் தன்னிச்சையாக மரியாதைத் தரப்பட்டிருக்கும். அவர்களைப் பற்றிப் பேசும்போது மரியாதையுடனும், மதிப்புடனும் குறிப்பிடுவார்கள்.

ஆனால் எனக்கு அப்படியில்லை. நான் எனது வழியில் ஒவ்வொரு அடியாக முன்னேறுவதற்கும் நிறைய போராட வேண்டியிருந்தது. சில நேரங்களில் நமக்கு முன்பாக என்ன விதிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஒருவேளை சில விஷயங்கள் முன்பே தெரிந்திருந்தால் எனக்கு பயம் வந்திருக்கும்

கே:உங்களது வாழ்க்கையில் கடினமான பகுதி என்று எதைச் சொல்வீர்கள்?

எம்ஜிஆர் மரணத்திற்குப் பிறகு கட்சியில் என்னுடைய இடம் என்னவென்பதை வரையறுத்துக் கொள்ள போராடிய காலத்தில் நிறைய துரோகங்களை , கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அது அவ்வளவு சுலபமில்லை. ஒரு வழக்கறிஞராகவோ, கல்வியாளராகவோ இருந்திருந்தால் யாரும் என்னைப் பார்த்து அவதூறாக பேசியிருக்க முடியாது. அதே போல் ஒரு வழக்கறிஞரையோ , மருத்துவரையோ பேட்டி எடுக்கும்போது மரியாதையுடனேயே அணுகுகிறார்கள்.

ஆனால் ஒரு அரசியல்வாதியிடம் கேள்வி கேட்கிறபோது ரொம்ப கீழ்த்தரமாக, அவமானப்படுத்தும் விதமாக கேள்வி எழுப்புகிறார்கள். என்ன கேட்டாலும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ரொம்ப கஷ்டம் இது.

அரசியலில் இருப்பவர்களுக்கு கடினமான மனநிலையே எப்போதும் இருக்கும் என நினைக்கிறார்கள். உணர்வுப்பூர்வமாக இருப்பவர்கள் கடைசி வரை அப்படியே தான் இருப்பார்கள்.

என்னைப் போன்ற அதீத உணர்வுப்பூர்வமானவர்களுக்கு சாதாரண வலி கூட பெரிதாகவே பாதிக்கும். ஊடகத்தில் என்னைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் என்பது என்னை காயப்படுத்துகிறது. ஏனெனில் நிஜத்தில் நான் அப்படி இல்லை.

எனக்கு முன்னால் நின்று அர்த்தமற்றவைகளை யாரும் பேசுவதை அனுமதிக்க மாட்டேன். அந்த பழைய ஜெயலலிதா இல்லை நான். மலை மேல் தனிமையாக சந்நியாசி போல வாழவே விரும்புகிறேன். மனதளவில் அப்படித்தான் வாழ்கிறேன்.

கே:உங்களது நம்பிக்கையைப் பெற வேண்டுமானால் என்ன தகுதி இருக்க வேண்டும்?

எதையும் நேரிடையாக எதிர்கொள்ள வேண்டும். எனக்கு எல்லாமே துல்லியமாகவும், சரியாகவும் நடைபெற்றாக வேண்டும்.

கே:விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

என்னை விட இங்கு யாரும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்க முடியாது. நான் என்னை எப்போதும் பரபரப்பாகவே வைத்துக் கொள்கிறேன். அதனால் உட்கார்ந்து இதைப் பற்றி யோச்சிக்கக்கூட நேரமிருக்காது.

கே:நீங்கள் காயப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள், சிறைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள்..எப்படி இருந்தது அப்போதைய மனநிலை?

போலீஸ் வேனில் என்னை ஏற்றும்போதே முடிவு செய்துவிட்டேன். என்ன நேரப்போகிறதோ அதை எதிர்கொண்டாக வேண்டுமென்று. பிறகு மனம் அமைதிக்குள் சென்றுவிட்டது. ஒருமாத காலம் மோசமான நிலையில் இருந்த சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தேன். ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை. என்னை நான் இரும்பாக்கிகொண்டேன்.

கே:நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?

நடக்கவில்லை அவ்வளவுதான். எல்லா இளம்பெண்களையும் போல திருமண 'ஐடியா' பிடித்திருந்தது. ஒரு நல்ல மனிதரோடு குடும்பம் நடத்த வேண்டுமென்கிற எல்லா இளம்பெண்களின் கனவு போல எனக்கும் இருந்தது.

எனக்கு பதினெட்டு வயதாக இருக்கும்போதெல்லாம் அம்மா எனக்கொரு திருமணம் செய்து வைத்திருந்தார்கள் என்றால் திருப்தியுடன், சந்தோசமாக குழந்தைகளை வளர்த்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் இருந்திருப்பேன். ஆனால் வாழ்க்கை யாருக்கும் சொல்லித் தராததையெல்லாம் எனக்குக் கற்றுக் கொடுத்தது.

கே:நமக்கென்று ஒரு குடும்ப இல்லையே என்று யோசித்திருக்கிறீர்களா?

கண்டிப்பாக இல்லை. என்னுடைய சுதந்திரம், விடுதலையின் மதிப்பு எனக்குத் தெரியும். என்னைச் சுற்றியிருக்கும் தோல்வியால் முடிந்த திருமணங்களைப் பார்க்கிறேன். சில குடும்பங்களில் குழந்தைகள் அம்மா, அப்பாவிடம் நன்றியில்லாமல் இருக்கிறார்கள்.

இப்போதுள்ள இளைய தலைமுறையினர் பொறுப்பில்லாமல் அப்பா, அம்மாவை கைவிட்டுவிடுகிறார்கள். அவர்களை முதியோர் இல்லத்துக்கு விரட்டுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது திருமணம் நடக்காததும், இப்படிப்பட்ட குழந்தைகள் இல்லாததும் நல்ல விஷயமென்றே நினைக்கிறேன்.

நான் இப்போது இருக்கும் வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவுகளை நானே எடுத்துக் கொள்ள முடியும். தனிப்பட்ட யாரையும் திருப்திப்படுத்துவதற்கு நான் எதையும் செய்ய வேண்டியதில்லை. இது சுயநலமாகத் தெரியும். ஆனால் அப்படியில்லை. மூன்றில் ஒரு பங்கு என்னுடைய வாழ்க்கையை அம்மா தான் ஆதிக்கம் செலுத்தினார். அம்மா விரும்புவதைத் தான் செய்தாக வேண்டும். எனக்குப் பிடித்ததை நான் செய்ததே இல்லை.

பிறகுள்ள எனது பெரும்பாலான வாழ்க்கையை எம்ஜிஆர் ஆதிக்கம் செலுத்தினார். இப்போது ஒரு பங்கு வாழ்க்கையே மீதமிருக்கிறது.

இப்போது எனக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்போது அரசியலுக்கு 'குட் பை' சொல்கிறேனோ அப்போது தான் முழு விடுதலையாவேன்.

(மல்லிகை மகள் இதழுக்காக 2014 ல் Deepa Janakiraman மொழி பெயர்த்த பேட்டியை இங்கே சுருக்கி இருக்கிறோம் )


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 April 2024 4:35 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...